ADDED : ஆக 01, 2011 07:46 PM
சென்னை:லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை எதிர்த்து, அரசு ஊழியர்கள், 32 பேர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.தமிழக அரசு, புதுச்சேரி அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அரசு ஊழியர்கள், 32 பேர், லஞ்ச வழக்கில் பிடிபட்டனர்.
இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில், வழக்கு தொடரப்பட்டது. 32 பேரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதை எதிர்த்து, இவர்கள் மனுக்கள் தாக்கல் செய்து, தடை உத்தரவு பெற்றனர்.பூர்வாங்க மனுக்களை நீதிபதி சந்துரு விசாரித்தார். தமிழக அரசு சார்பில் சிறப்பு அரசு பிளீடர் சுப்பையா, புதுச்சேரி அரசு சார்பில் அரசு பிளீடர் மாலா ஆஜராகினர். மனுக்களை நீதிபதி சந்துரு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மேற்கோள் காட்டி, மனுக்கள் ஒவ்வொன்றையும் நீதிபதி சந்துரு தள்ளுபடி செய்தார்.