ADDED : அக் 05, 2011 01:27 AM
தர்மபுரி: தர்மபுரியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ்களில்
பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகம் இருந்தது.தென் மாவட்டங்களை சேர்ந்த
பலர் ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர். அதே
போல் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பலரும் கர்நாடகா மாநிலத்தில் பணிபுரிந்து
வருகின்றனர். இன்று சரஸ்வதி பூஜை நாளை விஜயதசமி தொடர்ந்து சனி மற்றும்
ஞாயிறு ஆகிய நாட்களில் விடுமுறை என்பதால், பல்வேறு பகுதியில் பணிபுரியும்
தொழிலாளர்கள் பலரும் வெளியூர்களில் இருந்து தங்கள் ஊருக்கு
திரும்பினர்.குறிப்பாக ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த
பஸ்களில் வழக்கத்தை விட இரு மடங்கு பயணிகள் கூட்டம் இருந்தது.
அதே போல்
நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டதால், தர்மபுரியில்
தங்கி படித்து வரும் வெளியூரை சேர்ந்த மாணவ, மாணவிகளும் தங்கள் ஊருக்கு
புறப்பட்டு சென்றனர்.இதனால், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம்
அலைமோதியது. கூட்டம் அதிகம் இருந்தால், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போலீஸார்
தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தர்மபுரியில் இருந்து சேலம், ஈரோடு,
மேட்டூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம்
அலைமோதியது.தர்மபுரியில் இருந்து மாவட்டத்தின் பல பகுதிக்கு செல்லும்
பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. இரவு வரையில் இதே நிலை
நீடித்தது.


