/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆய்வுக்கூட்டம் :அமைச்சர் முனுசாமி தகவல்தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆய்வுக்கூட்டம் :அமைச்சர் முனுசாமி தகவல்
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆய்வுக்கூட்டம் :அமைச்சர் முனுசாமி தகவல்
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆய்வுக்கூட்டம் :அமைச்சர் முனுசாமி தகவல்
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆய்வுக்கூட்டம் :அமைச்சர் முனுசாமி தகவல்
ADDED : செப் 19, 2011 12:03 AM
கிருஷ்ணகிரி : ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, தலைமையாசிரியர்கள் மட்டத்திலான ஆய்வு கூட்டம் விரைவில் நடத்தப்படும்,'' என்று தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் முனுசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இலவச லேப்-டாப் வழங்கும் விழா மற்றும் பள்ளிகளில் இடை நிற்பதை தவிர்க்கும் வகையில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ்1, ப்ளஸ்2 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் விழா, தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பர்கூர் சட்டசபை தொகுதி அஞ்சூர்-ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு இடங்களில் நடந்தது. கிருஷ்ணகிரியில் நடந்த விழாவுக்கு, கலெக்டர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., பிரகாசம் வரவேற்றார். விழாவில், 746 பயனாளிகளுக்கு, 1 கோடியே 56 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் முனுசாமி பேசியது: தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் செயல்வடிவமாக்கி கொண்டிருக்கிறார். கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் கழிவறை கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான நிதி கடந்த சட்டசபை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை விட, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாக உள்ளது. சம்பளம் குறைவாக இருந்தாலும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் பாடம் நடத்துகின்றனர். இதே போல் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் முழுமனதோடு ஈடுபாடுடன், மாணவர்களுக்கு கல்வி கற்று தரவேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அமைச்சர், கலெக்டர் , கல்வி துறை அதிகாரிகள் மற்றும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் ஆய்வுக் கூட்டம் விரைவில் நடத்தப்படும். கூட்டத்தில், தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதற்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில், பர்கூர் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, ஊத்தங்கரை எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., முனிவெங்கடப்பன், முன்னாள் எம்.பி., பெருமாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூர்த்தி, பாஸ்கரன், மாவட்ட கல்வி அலுவலர் மார்ஸ், பி.டி.ஏ. தலைவர்கள் கேசவன், வெங்கடாசலம், புகழேந்தி, அரியப்பன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.