ADDED : ஆக 15, 2011 10:28 AM
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்கள் தலைவராக இருந்தாலும், பணிவைக் கடைபிடிக்க அவர்கள் தவறியதே இல்லை.
ஒருமுறை நாயகம்(ஸல்) அவர்களை முன்பின் பார்த்திராத ஒருவர் வந்தார். அண்ணலாரைக் கண்டதும் என்ன பேசுவதென்றே தெரியாமல், மரியாதை கலந்த பயத்துடன் அப்படியே நின்றார். அவரது நிலையைப் புரிந்து கொண்ட நாயகம்(ஸல்) அவர்கள், ''அன்பரே! என்னை அரசன் என்று நீர் நினைக்க வேண்டாம். உலர்ந்த மீன் தின்ற குறைஷிக் கூட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியின் மகன் தான் நான்,'' என்று அழகாகச் சொன்னார்கள். இதுபோல, அண்ணலாரின் தோழர்கள் சிலர்,
'நாயகம் அவர்களே! பொதுவாக பல நாடுகளில் மக்கள் தங்கள் மன்னர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்கிறார்கள். அதுபோல, உங்கள் பாதங்களிலும் விழ எங்களுக்கு அனுமதி தரவேண்டும்,'' என்றனர்.
அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், ''நான் ஒருவேளை மரணமடைந்து விட்டால், என் அடக்கஸ்தலத்தில் நீங்கள் மண்டியிட்டு பணிவீர்களா?'' எனக்கேட்டார்கள். அவர்கள், 'அதெப்படி முடியும்?'' என்றனர்.
'அப்படியானால், நான் வாழும் காலத்தில் ஏன் பணிய நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டு அவர்களை அடக்கினார்கள். உயர்பதவியில் இருப்பவர்களின் காலில் விழுபவர்கள் இனியாவது திருந்த வேண்டும்.