/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேயிலை ஏலத்தில் ரூ.2 கோடி தூள் தேக்கம்தேயிலை ஏலத்தில் ரூ.2 கோடி தூள் தேக்கம்
தேயிலை ஏலத்தில் ரூ.2 கோடி தூள் தேக்கம்
தேயிலை ஏலத்தில் ரூ.2 கோடி தூள் தேக்கம்
தேயிலை ஏலத்தில் ரூ.2 கோடி தூள் தேக்கம்
ADDED : ஆக 17, 2011 02:19 AM
குன்னூர் : குன்னூர் தேயிலை ஏல விற்பனையில் சுமார் 2 கோடி ரூபாய்
மதிப்புள்ள தேயிலை தூள் தேங்கியது.நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும்
தேயிலை தூள் குன்னூர் தேயிலை ஏல மையத்தின் மூலம் வாரம் தோறும்
விற்கப்படுகிறது. இந்தாண்டின் 32வது ஏலத்தில், மொத்தம் 15.33 லட்சம் கிலோ
தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது; இலை ரகம் 10.53 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம்
4.80 லட்சம் கிலோ அடங்கும். ஏற்றுமதி வர்த்தகத்தில் பாகிஸ்தான், ரஷ்யா
நாட்டு வர்த்தகர்கள் தவிர, வழக்கமாக பங்கெடுக்கும் எகிப்து, ஐரோப்பிய
நாடுகளின் வர்த்தகர்கள் பங்கேற்கவில்லை.கர்நாடகா, ஆந்திரா, குஜராத்,
மகாராஷ்டிரா உட்பட வட மாநில வர்த்தகர்களின் பங்களிப்பும் சுமாராக
இருந்ததால், விற்பனைக்கு வந்த தேயிலை தூளில் சுமார் 2 கோடி ரூபாய்
மதிப்புள்ள 27 சதவீத தேயிலை தூள் தேங்கியது. அனைத்து ரக தூளின் விலையும்
கிலோவுக்கு 3 ரூபாய் விலை குறைந்தது. இந்த ஏலத்தில் ஏற்றுமதி
வர்த்தகத்துக்கு பயன்படும் ஆர்தோடக்ஸ் ரக தூளுக்கு வழக்கத்தை விட கிராக்கி
கூடுதலாக இருந்தது. கடந்த சில மாதங்களாக ஆர்தோடக்ஸ் ரக தூளுக்கு அதிகபட்சம்
180 - 197 வரை மட்டுமே விலை கிடைத்து வந்த நிலையில், தமிழக முதல்வர்
ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கோத்தகிரி கொடநாடு தேயிலை
தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்த ஆர்தோடக்ஸ் ரக
தேயிலை தூளின் விலை கிலோவுக்கு 325 ரூபாய் வரை விலை போயுள்ளது.சிடிசி ரக
தூளில், அதிகபட்சம் கிலோவுக்கு 139 ரூபாய் விலை கிடைத்தது. ஆர்தோடக்ஸ்
ரகத்தில் அதிகபட்சம் கிலோவுக்கு 325 ரூபாய் விலை கிடைத்தது. இலை ரகத்தில்
சாதாரண ரக தூளுக்கு கிலோவுக்கு 35 - 40 ரூபாய், சிறந்த ரக தூளுக்கு 80-130
ரூபாய், டஸ்ட் ரகத்தில் சாதாரண ரக தூளுக்கு 40-45 ரூபாய், சிறந்த ரக
தூளுக்கு 85-135 ரூபாய் விலை கிடைத்தது. வரும் 18,19 தேதிகளில்
நடத்தப்படவுள்ள விற்பனை எண் 33க்கான ஏலத்திற்கு, மொத்தம் 12.38 லட்சம் கிலோ
தேயிலை தூள் விற்பனைக்கு உள்ளது.
சத்துணவு ஊழியர்களுக்கு பயிற்சி முகாம்
கூடலூர் : 'அரிசியை ஊர வைத்து வேக வைப்பதன் மூலம் விரைவாக சமைக்க முடியும்'
என கூடலூரில் நடந்த சத்துணவு ஊழியர்களுக்கான பயிற்சி முகாமில்
தெரிவிக்கப்பட்டது.கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூநலத்துறை
மற்றும் சத்துணவு திட்டம் மூலம், சத்துணவு ஊழியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி
முகாம் நடந்தது. முகாமை, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு)
இளம்பரதி துவக்கி வைத்தார். கோவை அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் கல்லூரி
விரிவுரையாளர் ராதா பயிற்சி வழங்கிய பேசுகையில்,''அரிசியை அதிகபட்சம்
மூன்று முறை கழுவினால், அதன் சத்துகள் இழக்க நேரிடம். அரிசியை கழுவி ஊர
வைத்து சமையல் செய்தால், விரைவாக சமைக்க முடியும்; எரிபொருள் வீணாவது
தவிர்க்கப்படும்.பூ கோஸ் உள்ளிட்ட கிரை வகைகள் கொழுப்பை குறைக்கிறது.
கிரையை தனியாக தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. முட்டையை குளிர்சாதன
பெட்டியில் வைப்பதை விட வெளியே வைத்து பயன்படுவதே நல்லது. முட்டையை 5
நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்,'' என்றார். முகாமில், கூடலூர் ஊராட்சி
ஒன்றிய ஆணையாளர் ஜான்சாமுவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும்
சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இ.கம்யூ., கிளை கூட்டம்
கோத்தகிரி : கோத்தகிரி மசகல் கிராமத்தில் இ.கம்யூ., கட்சி கிளை கூட்டம்
நடந்தது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மசகர் அரசு
பட்டுப்பண்ணையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை களைந்து, தேவையான
தொழிலாளர்களை நியமிக்கவேண்டும்; இப்பகுதியில் வசித்துவரும் ஆதிவாசி
குடும்பங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உட்பட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி சின்னம்மாள் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை செயலர் ராஜூபெள்ளி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். புதிய
நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதில், செயலராக சாந்தகுமார், துணை
செயலராக பாஸ்கரன் மற்றும் பொருளாளராக சின்னம்மாள் ஆகியோர்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகி பாப்பாத்தி நன்றி கூறினார்.