தீவிரவாதத்தை ஒடுக்க மலேசியா முழு ஆதரவு: மலேசிய பிரதமர்
தீவிரவாதத்தை ஒடுக்க மலேசியா முழு ஆதரவு: மலேசிய பிரதமர்
தீவிரவாதத்தை ஒடுக்க மலேசியா முழு ஆதரவு: மலேசிய பிரதமர்
UPDATED : செப் 21, 2011 08:31 AM
ADDED : செப் 21, 2011 03:52 AM

கோலாலம்பூர்: இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் தீவிரவாதத்தைத் தடுக்க, உளவுத்துறை பரிமாற்றங்கள் உட்பட உதவிகள் செய்யத் தயாராக உள்ளோம் என்று மலேசியப் பிரதமர் முகமது நஜீப் ரசாக் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் இந்திய பத்திரிகையாளர் குழுவைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது:
இந்திய- மலேசிய உறவு பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாக உள்ளது. இரு நாடுகளிலும் பரஸ்பரம் அதிக அளவு முதலீடு செய்யப்பட்டுள்ளன. மலேசியாவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். மலேசிய தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு, இந்திய நிறுவனங்களில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். கட்டமைப்பு வசதிகள், மருத்துவம், சுற்றுலா போன்ற துறைகளில் இந்தியாவோடு இணைந்து செயல்படுகிறோம். இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு, உடனடி விசா ( லேண்டிங் விசா) தருவதில் பிரச்னை உள்ளன. சிலர் இங்கு வந்து, சட்ட விரோதமாக தங்கி விடுகின்றனர். அவர்களைக் கண்டுபிடிப்பது சிரமம்.
மலேசியாவில் வாழும் இந்திய பூர்வீக மக்களுக்கான வசதிகள், பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை தருவது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க சிறப்பு அதிரடி அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார குழப்பங்கள் ஏற்பட்டபோதும், மலேசியா பாதிக்கப்படவில்லை. இன்னும் எங்கள் பொருளாதாரம் உயரும் என எதிர்பார்க்கிறோம். ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து மலேசியாவில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய மலேசியாவை உருவாக்குவோம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தேர்தல் நடக்கும்போது, மீண்டும் எனது தலைமையில் அரசிற்கு மக்கள் ஆதரவு தருவர்.
மலேசியாவில் சுற்றுலா நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இங்கு தீவிரவாத மிரட்டல், தாக்குதல் ஏதும் நடந்தது இல்லை. இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் தீவிரவாதத்திற்கு எதிராக ஒத்துழைக்க தயாராக உளளோம். உளவு ரீதியிலான உதவிகள், தகவல் பரிமாற்றங்களை மலேசியா அளிக்கும்.
மலேசியாவில் முதலீடு செய்வதில் அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா 6வது இட்ததிலும் உள்ளது. பல்வேறு நாடுகளின் முதலீடுகளை அதிகரிக்க சிறப்பு திட்டங்களை வைத்துள்ளோம்,
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர்