Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சத்துணவு அமைப்பாளருக்கு ஐகோர்ட் கண்டிப்பு

சத்துணவு அமைப்பாளருக்கு ஐகோர்ட் கண்டிப்பு

சத்துணவு அமைப்பாளருக்கு ஐகோர்ட் கண்டிப்பு

சத்துணவு அமைப்பாளருக்கு ஐகோர்ட் கண்டிப்பு

ADDED : செப் 18, 2011 09:29 PM


Google News
Latest Tamil News

சென்னை:ஏற்கனவே வழக்கு தொடுத்திருப்பதை மறைத்து, மீண்டும் வழக்கு தொடுத்த சத்துணவு அமைப்பாளரை, சென்னை ஐகோர்ட் கண்டித்தது.

மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து, அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகில், வடுகப்பட்டு கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, சத்துணவு அமைப்பாளராக, லட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது பொறுப்பை மற்றொருவரிடம் ஒப்படைக்குமாறு, லட்சுமிக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.



கடந்த மார்ச் மாதம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் லட்சுமி மனுத் தாக்கல் செய்தார். இதில், தடை உத்தரவு கிடைக்கவில்லை.இதையடுத்து, மற்றொரு மனுவை, ஐகோர்ட்டில் லட்சுமி தாக்கல் செய்தார். ஏற்கனவே மனுத் தாக்கல் செய்திருந்ததை மறைத்து, இந்த மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி சந்துரு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் உள்ள குற்றச்சாட்டுகள், கையெழுத்து குறித்து, நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பினார்.மனுவில் கூறியுள்ள விவரங்கள், தனக்குத் தெரியாது என, லட்சுமி முதலில் கூறியுள்ளார். ஆனால், ஆங்கிலத்தில் கையெழுத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி, மனுவில் உள்ள விவரங்கள், அவரிடம் வாசித்துக் காட்டப்பட்டது. உடனே, அவர் மன்னிப்பு கேட்டார்.



மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு:மனுதாரரின் நடத்தையானது, கடுமையான நடவடிக்கைக்கு உட்பட்டது. கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை கூட எடுக்கலாம். ஆனால், மிகக் குறைவான சம்பளத்தில் மனுதாரர் உள்ளார்.

முக்கியமான தகவலை மறைத்ததற்காக, தன்னை மன்னிக்கும்படி மனுதாரர் கேட்டுக் கொண்டார். வருத்தம் தெரிவித்துக் கடிதம் கொடுத்துள்ளார். இதை ஏற்கிறேன்.

கடுமையான நடவடிக்கையை, கோர்ட்டால் எடுக்க முடியும் என்றாலும், ஒட்டுமொத்த சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அவர் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை.



ஒரே வழக்குக்கு, வெவ்வேறு வழக்கறிஞர்களை ஈடுபடுத்தும் வழக்கம், வழக்காடுபவர்கள் மத்தியில் உள்ளது என்றும், இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.கோர்ட் நடவடிக்கைகளைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் எனவும், சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.இவ்வாறு, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us