சேலம்: நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகை காரணமாக, கொண்டைக் கடலை விலையில் கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்வு ஏற்பட்டுள்ளது.
கொண்டைக் கடலையை மூலப் பொருளாக கொண்டு தயார் செய்யப்படும், கடலை மாவு, பொரி கடலை, கடலை பருப்பு ஆகியவற்றின் விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. பொரி கடலை மொத்த விலையில், 54 கிலோ எடை கொண்ட மூட்டை, 2,400 ரூபாய்க்கு விற்றது, 3,400 ரூபாய்க்கு விற்கிறது. சில்லரை விலையில் கிலோ, 50 ரூபாய்க்கு விற்றது, 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடலை மாவு மொத்த விலையில், 50 கிலோ எடை கொண்ட மூட்டை, 2,800 ரூபாய்க்கு விற்றது, 3,300 ரூபாய்க்கு விற்கிறது. மொத்த விலையில் ஏற்பட்ட உயர்வை அடுத்து, சில்லரை விலையில் கிலோ, 45 ரூபாய்க்கு விற்றது, 70 ரூபாய்க்கு விற்கிறது. கடலை பருப்பு விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கடலை பருப்பு குவின்டால், 4,100 ரூபாய்க்கு விற்றது, 5,600 ரூபாய்க்கு விற்கிறது. சில்லரை விலையில் கிலோ, 43 ரூபாய்க்கு விற்றது, 60 ரூபாய்க்கு விற்கிறது.
சேலம் மளிகைக் கடை வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி கூறியதாவது: தமிழகத்தின் கொண்டைக் கடலை தேவையை விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தர்மபுரி, விழுப்புரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களே நிறைவு செய்கின்றன. நடப்பாண்டில் இங்கு எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. ஆந்திரா, கர்நாடகா, மஹராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு, கொண்டைக் கடலை வரத்து முற்றிலும் நின்று விட்டது. தமிழகத்தில் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரி, சரஸ்வதி பூஜையை தொடர்ந்து தீபாவளி பண்டிகையும் வர உள்ளது. தொடர் பண்டிகை காரணமாக, இவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பெரிய வியாபாரிகள் அதிக அளவில் கொண்டைக் கடலையை இருப்பு வைக்க துவங்கி விட்டனர். அதனால், விலையில் குவிண்டாலுக்கு,1,000 ரூபாய் வரையும், கிலோவுக்கு, 10 ரூபாய் வரையும் உயர்வு ஏற்பட்டுள்ளது, என்றார்.


