Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தி.மு.க.,வை மிஞ்சும் அளவுக்கு மணல் கொள்ளை: காவிரியில் சத்தமின்றி இரவு பகலாக வசூல்வேட்டை

தி.மு.க.,வை மிஞ்சும் அளவுக்கு மணல் கொள்ளை: காவிரியில் சத்தமின்றி இரவு பகலாக வசூல்வேட்டை

தி.மு.க.,வை மிஞ்சும் அளவுக்கு மணல் கொள்ளை: காவிரியில் சத்தமின்றி இரவு பகலாக வசூல்வேட்டை

தி.மு.க.,வை மிஞ்சும் அளவுக்கு மணல் கொள்ளை: காவிரியில் சத்தமின்றி இரவு பகலாக வசூல்வேட்டை

ADDED : செப் 17, 2011 09:34 PM


Google News
Latest Tamil News

தி.மு.க., ஆட்சியை மிஞ்சும் அளவுக்கு, சத்தமின்றி காவிரியாற்றில், அரசு விடுமுறை நாளில், மணல் கொள்ளை ஜரூராக நடக்கிறது.



தமிழகத்தின் முக்கிய மணல் ஆதாரப் பகுதியாக, திருச்சி மண்டலத்திலுள்ள கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களின் காவிரியாறு அமைந்துள்ளது.

தி.மு.க., ஆட்சியில் இரண்டு யூனிட் மணல், 624 ரூபாயாக அரசு நிர்ணயித்தாலும், அத்துடன், 2,000 முதல் 4,000 ரூபாய் வரை கணக்கில் காட்டாமல், ஆளுங்கட்சியினர் வசூலித்துக் கொண்டு, மூன்று யூனிட் மணல் வழங்கி கொள்ளையடித்தனர். டிரைவர் பேட்டா, டீசல் விலை உயர்வு, மறைமுகமாக வசூலித்த தொகை ஆகியவற்றால், சென்றாண்டு இறுதியில் மணல் லோடு, 15 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், சப்ளையை அதிகரிக்க, குவாரிகள் அதிகமாகத் திறக்க நடவடிக்கை துவங்கியது. அதேவேளை, மேட்டூர் அணையிலும் தண்ணீர் திறக்கப்பட்டதால், கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டத்தில், 40க்கும் மேற்பட்ட இடத்தில் செயல்பட்ட குவாரிகள் பாதியாகக் குறைந்தன. எனினும், ஜூலை மாதம் வரை பொதுப்பணித் துறை உரிய கட்டணத்துக்கான, 'டிடி' மட்டும் பெற்று, சரியான அளவு மட்டும் மணல் வழங்கினர். இதற்கிடையே, மணலை லாரியில் ஏற்றிவிடும், 'லிப்டிங் கான்ட்ராக்ட்டை,' அ.தி.மு.க.,வுக்கு வேண்டியவரான கோவையைச் சேர்ந்த ஆறுமுகசாமி எடுத்து விட்டார் என்ற தகவல் பரவியது.



தி.மு.க., ஆட்சியில், 'லிப்டிங் கான்ட்ராக்ட்' என்ற பெயரில் உள்ளே வந்த, தி.மு.க.,வினர் தான் கூடுதல் தொகை பெற்று, மணல் கொள்ளையில் ஈடுபட்டனர். தற்போதும், அதேபோல், 'லிப்டிங் கான்டராக்ட்' விடப்பட்டதால், விரைவில் கடந்த காலம் போலவே மணல் கொள்ளை துவங்குமென எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே, ஜூலை மாதம் இறுதியிலிருந்து, பழையபடி மணல் கொள்ளை துவங்கியுள்ளது. கரூர் மாவட்டம், மருதூர், வதியம் உட்பட திருச்சி, தஞ்சை மாவட்ட குவாரிகளில், ஆற்றிலிருந்து மணலை எடுத்து வந்து, கரையோரம் மலைபோல குவித்து, 'ஸ்டாக் பாயின்ட்' அமைத்து, விற்பனை செய்கின்றனர். தற்போது, இரண்டு யூனிட் மணலுக்கு, அரசு நிர்ணயித்த தொகைக்கான, 'டிடி'யுடன் கூடுதலாக, 2,000 முதல் 4,000 ரூபாய் வரை வசூலித்துக் கொண்டு, வண்டிக்குத் தகுந்தாற்போல், ஐந்து யூனிட் கூட வழங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சொல்லப் போனால், தி.மு.க., ஆட்சியில், விதிமுறையை மீறி ஞாயிற்றுக் கிழமை மற்றும் அரசு விடுமுறை நாளில், லாரிகளில் மணல் ஏற்ற தயக்கம் காட்டி, இரவு நேரத்தில் தெரியாமல் ஏற்றி வந்தனர். தற்போது, எவ்வித தடையுமின்றி, கரூர், திருச்சி மாவட்டத்திலுள்ள குவாரிகளில், அரசு விடுமுறை உட்பட அனைத்து நாட்களிலும், இரவு, பகலாக ஜரூராக லாரியில் மணலை ஏற்றிய வண்ணம் உள்ளனர். முன்பை விட, நாளொன்றுக்கு 500 முதல் 1,000 லாரிகளுக்கு கூடுதலாகவும், மணல் ஏற்றப்படுகிறது. கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், மணல் லாரிகள் நடமாட்டம் அதிகமானாலும், விபத்து ஏதும் ஏற்படாததால், பொதுமக்களுக்குத் தெரியாமல் உள்ளது.



- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us