Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பெண்கள், ஆதிதிராவிடர் வார்டுகள் ஒரு பகுதியில் குவியலாக உள்ளது:அரசியல் கட்சிகள் ஆட்சேபனை

பெண்கள், ஆதிதிராவிடர் வார்டுகள் ஒரு பகுதியில் குவியலாக உள்ளது:அரசியல் கட்சிகள் ஆட்சேபனை

பெண்கள், ஆதிதிராவிடர் வார்டுகள் ஒரு பகுதியில் குவியலாக உள்ளது:அரசியல் கட்சிகள் ஆட்சேபனை

பெண்கள், ஆதிதிராவிடர் வார்டுகள் ஒரு பகுதியில் குவியலாக உள்ளது:அரசியல் கட்சிகள் ஆட்சேபனை

ADDED : செப் 09, 2011 02:12 AM


Google News

சென்னை:கிரேட்டர் சென்னையின் 200 வார்டுகளில், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள், ஒரே பகுதியில் குவியலாக இடம் பெற்றுள்ளதற்கு, அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 200 வார்டுகளில் எந்தெந்த பிரிவினர் போட்டியிடலாம் என, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு ஒதுக்கீடு செய்து, அந்த பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

200 வார்டுகளில், 58 வார்டுகள் பெண்களுக்கும், 26 வார்டுகள் ஆதிதிராவிடர்களுக்கும், இதில், 9 வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும், 116 வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.



200 வார்டுகளில், பெண்கள் அதிகம் உள்ள முதல் 58 வார்டுகளை தேர்வு செய்து, பெண்கள் வார்டுகளாகவும், ஆதிதிராவிடர்கள் அதிகம் உள்ள முதல் 26 வார்டுகளை ஆதிதிராவிடர்களுக்கும், இதில், ஆதிதிராவிடர் பெண்கள் அதிகம் உள்ள வார்டுகளை ஆதிதிராவிடர் பெண்களுக்கும் என ஒதுக்கியுள்ளனர்.



இவ்வாறு பிரிக்கப்பட்ட 200 வார்டுகளில், பரவலாக இல்லாமல், ஒரே பகுதியில் குவியலாக உள்ளது. ஒரு மண்டலத்தில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில், 15 வார்டுகளும் பெண்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் ஒதுக்கப்பட்டள்ளது. பொது பிரிவினர்களுக்கு இப்பகுதியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதுகுறித்து, எதிர்க்கட்சித் தலைவர் ரவி கூறும்போது, 'பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான வார்டுகளை, அவர்களின் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளின் அடிப்படையில் பிரிக்காமல், 200 வார்களிலும் பரவலாக பிரிக்க வேண்டும். ஒரு சில மண்டலங்களில் பொது பிரிவினருக்கு வார்டுகளே இல்லை. எனவே, 200 வார்டுகளிலும் பரவலாக ஒதுக்கீடு செய்ய, கிரேட்டர் சென்னைக்குள் இருக்கும் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு, பெண்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் உரிய வார்டுகளை பிரிக்கலாம்' என்றார்.



வார்டுகள் பிரிப்பு குறித்து, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:

பெண்களுக்கு 33 சதவீதம் கொடுக்க வேண்டும். ஆதிதிராவிடர்களுக்கு 19 சதவீதம் அளிக்க வேண்டும் என்ற அரசாணையின்படி, அவர்கள் அதிகம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மாநகராட்சி ஒன்றும் செய்ய முடியாது. திருத்தம் வேண்டுமானால், அதை மாநில அரசு தான் செய்ய முடியும்.



இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை பதிவு செய்துள்ள மாநகராட்சி, அவர்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி, பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான ஒதுக்கீட்டை பரவலாக்க வேண்டும் என அரசுக்கு அனுப்பியுள்ளது.



இது குறித்து, மேயர் சுப்ரமணியம் கூறும் போது, 'பெண்கள், ஆதிதிராவிடர் வார்டு பிரிப்பு பற்றி, அறிவிப்பு வெளியிட்டு, ஆட்சேபனைகளை பெற்று, இறுதி செய்திருக்க வேண்டும் என கூறுகின்றனர். அரசு விதிகளை அமல் செய்யும் போது, அறிவிப்பு வெளியிட வேண்டியதில்லை என அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனவே, அரசின் முடிவை பரிசீலிக்க வேண்டும் என, தீர்மானமாக அனுப்பியுள்ளோம்' என்றார்.அரசியல் கட்சிகளின் கோரிக்கை, வரவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்குள் ஏற்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே, அரசு அறிவித்துள்ள வார்டுகளின்படியே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us