Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"உலக தரத்தினால் ஆன பல்கலை' திட்டம் என்னாச்சு?கோவையில் ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

"உலக தரத்தினால் ஆன பல்கலை' திட்டம் என்னாச்சு?கோவையில் ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

"உலக தரத்தினால் ஆன பல்கலை' திட்டம் என்னாச்சு?கோவையில் ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

"உலக தரத்தினால் ஆன பல்கலை' திட்டம் என்னாச்சு?கோவையில் ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 22, 2011 10:59 PM


Google News

கோவை : கோவை மாவட்டத்தில் துவங்கப் போவதாக அறிவிக்கப்பட்ட உலக தரத்தினால் ஆன பல்கலையை உடனடியாக துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி, ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை செஞ்சிலுவை சங்கம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து ஈஸ்வரன் கூறியதாவது: 11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், இந்தியாவில் 14 இடங்களில் உலக தரத்தினால் ஆன பல்கலை (ஙிணிணூடூஞீ ஞிடூச்ண்ண் க்ணடிதிஞுணூண்டிtதூ), எட்டு இடங்களில் ஐ.ஐ.டி., ஏழு இடங்களில் ஐ.ஐ.எம்., உருவாக்க முடிவு செய்துள்ளதாக, மார்ச் 2008ல் மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில், கோவை மாவட்டத்தில் பல்கலையை துவக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், 11ம் ஐந்தாண்டு திட்டம் முடியும் நிலையில், இன்னும் பல்கலை துவங்குவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பின்பு அவற்றை கிடப்பில் போடும் நிலையை அரசு தொடரக் கூடாது. கோவையில் விரைவில் உலக தரத்தினால் ஆன பல்கலை துவங்குவது, இம்மாவட்டத்தின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு உதவும். புதிதாக துவங்கப்பட்ட அனைத்து அண்ணா பல்கலைகளிலும் உறுப்புக் கல்லூரிகள் உள்ளன. இந்த உறுப்புக் கல்லூரிகளில் ரெகுலர் பி.இ., வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், கோவை அண்ணா பல்கலையில் மட்டும் ஒரு உறுப்புக் கல்லூரி கூட ஆரம்பிக்கவில்லை. ஆகவே பொறியியல் படிப்புகளுக்கென பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் புதிய பொறியியல் கல்லூரிகளை அரசு துவங்க வேண்டும். நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலைகளை ஒருங்கிணைத்தாலும், அண்ணா பல்கலையின் மண்டல அலுவலகம் கோவையில் இயங்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களிலும், கல்வித் துறைக்கு சொந்தமான நிலங்களிலும் சிறு பகுதியைக் கூட வேறு துறைக்கு ஒதுக்கக் கூடாது. கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் இடத்தை ஐ.டி., பூங்காவுக்கு மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் வருங்காலத்தில் கோவையில் மருத்துவக் கல்லூரியின் வளர்ச்சி தடைபடும் என்பதால், இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, ஈஸ்வரன் தெரிவித்தார்.கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் மோகன் குமார், மாநில் விவசாய அணி செயலா ளர் பொன்னுசாமி, மாவட்ட பொருளாளர் ராஜேந்தி ரன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

ஐ.டி., பூங்கா இடத்தில் நவீன மருத்துவமனை: ம.தி.மு.க., : ம.தி.மு.க., செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், ''டில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையாக சென்னையில் அதிநவீன மருத்துவமனை துவங்குவது போல், கோவையிலும் அதிநவீன மருத்துவமனை துவங்க வேண்டும். கோவையில் கட்டப்பட்டுள்ள ஐ.டி., பூங்காவில் பங்கேற்க நிறுவனங்கள் தயங்குகின்றன. அரசின் கோடிக்கணக்கான ரூபாய் ஓரிடத்தில் வீணாகிறது. சென்னை புதிய தலைமை செயலகத்தை மருத்துவக் கல்லூரி இணைந்த மருத்துவமனையாக மாற்றுவது போல், கோவை ஐ.டி., பூங்காவை அதிநவீன மருத்துவமனையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us