Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் :விவசாயத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு: நிலத்தடி நீர்மட்டம் உயரும்

சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் :விவசாயத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு: நிலத்தடி நீர்மட்டம் உயரும்

சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் :விவசாயத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு: நிலத்தடி நீர்மட்டம் உயரும்

சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் :விவசாயத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு: நிலத்தடி நீர்மட்டம் உயரும்

ADDED : ஜூலை 27, 2011 01:08 AM


Google News
சென்னை :தமிழகத்தில் சொட்டுநீர் பாசனத்திற்கு முழுமையாக மானியம் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. விவசாயத்துறை அதிகாரிகள் கிராமம் வாரியாக, சிறு மற்றும் பெரு விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் கிணற்று பாசனம் இல்லாமல் போய் விட்டது. போர்வெல் (ஆழ் துளை குழாய்) பயன்படுத்தி, நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயம் செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இந்நிலை தொடர்ந்தால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் உணவு தானிய விளைச்சல் குறையும் அபாயம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு அரசு, விவசாயிகளுக்கு பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு, தற்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 'போர்வெல்' பயன்படுத்தி அதிகப்படியான நீரை உறிஞ்சி விவசாயம் செய்வதற்கு மாற்று ஏற்பாடாக, சொட்டுநீர் பாசன திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது. பல ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள தென்னை, பெரிய நெல்லி, தேக்கு மற்றும் பல வகை மரம் மற்றும் செடிகளுக்கு, கூலியாட்களை வைத்து தண்ணீர் பாய்ச்ச முடியாததால், ஒரே இடத்தில் இருந்து பிளாஸ்டிக் பைப்புகள் மூலம் 'சொட்டு சொட்டாக' நீர் பாய்ச்சும் முறையை, சில ஆண்டுகளுக்கு முன் தனியார்கள் கையாளத் துவங்கினர். சொட்டுநீர் பாசன முறையில் கூலியாட்களின் தேவை மிக, மிக குறைவு. அத்துடன் சாதாரண முறையில் தோட்டத்திற்கு பாய்ச்சப்படும் தண்ணீரின் அளவில், பல மடங்கு குறைவாகவே நீர் தேவைப்படும்.

கூலியாட்கள் குறைவு, தண்ணீர் குறைவு போன்ற சிறப்பம்சங்கள், இத்திட்டத்தில் உள்ளது பற்றி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு, கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இரவில் எழுந்து தோட்டத்திற்கு நீர்பாய்ச்ச செல்லும் போது, கால் இடறி தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்து இறத்தல், பாம்பு கடியால் இறத்தல் போன்ற பல அபாயங்களை விவசாயிகள் சந்திக்கின்றனர். சொட்டு நீர் பாசன திட்டத்தால், இந்த அபாயங்களில் இருந்து விடுபட விவசாயிகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. என்ன நோக்கத்திற்காக இத்திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வந்துள்ளது என்பதை விவசாயிகளுக்கு, அதிகாரிகள் தெளிவுபடுத்தி வருகின்றனர். பல கிராமங்களில், இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர, விவசாயிகள் ஆர்வமாக உள்ள விவரம் அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

'தினமலர்' செய்தி அரசு மும்முரம்

விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில், சொட்டுநீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, விவசாயத்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியுன், கடந்த மாதமே தினமலரில் செய்தி வெளியாகியிருந்தது. அதன், எதிரொலியாக அத்திட்டத்தை செயல்படுத்த விவசாயத்துறை அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். மாவட்டந்தோறும், கிராமம் வாரியாக, விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் அப்பயிர்களுக்கு சொட்டுநீர் பாசன வசதி கிடைத்தால், விளைச்சல் மற்றும் மகசூல் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

என்.செந்தில்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us