Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மரவனேரி சாலைக்கு மறுபிறவி உண்டா?

மரவனேரி சாலைக்கு மறுபிறவி உண்டா?

மரவனேரி சாலைக்கு மறுபிறவி உண்டா?

மரவனேரி சாலைக்கு மறுபிறவி உண்டா?

ADDED : செப் 20, 2011 01:03 AM


Google News

சேலம்: சேலம் மரவனேரி சாலை, குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகளுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தும் வகையில், பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கிறது.

மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்கும் அதிகாரிகளும், சாலையைப் பற்றி கண்டுகொள்வதில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதிலும் மெத்தனப்போக்குதான் நிலவும். சேலம் மாநகராட்சியில், வாகனங்கள் அதிகம் கடந்து செல்லும் சாலைகள் பல மோசமான நிலையில் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களும், மக்கள் பிரச்னைப் பற்றி கண்டுகொள்வதில்லை. மேயர், கமிஷனர் போன்றோரும் இதில் விதிவிலக்கல்ல. கடந்த ஆட்சியின்போது, அமைச்சர்கள் வரும்பட்சத்தில், அந்த சாலைகள் உடனடியாக தயாராகும். அந்த வகையில், மரவனேரி சாலைக்கு இதுவரை விடிவு பிறக்கவில்லை. ஐந்து ஆண்டுக்கும் மேலாக, சுந்தர் லாட்ஜ் முதல் அணைமேடு வரை உள்ள மரவனேரி சாலை, குண்டும், குழியுமாக, உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள், சாலைமறியலில் ஈடுபட்டும், கமிஷனரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தபோதும், அவை குப்பைக் கூடைக்கு தான் சென்றன.



மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும், சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில், சாலை சீரமைப்பது குறித்து அதிகாரிகள் கூறுவர். ஆனால், அதற்கான பணிகள் துவங்கப்படாது. தற்போதைய, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் மரவனேவரி சாலையை சீரமைப்பது குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். சாலையை சீரமைக்காதபட்சத்தில், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி, உயிரிழக்க நேரிடும். அதிவேகத்தில் வரும் தனியார் பஸ்களால், சிதைந்து கிடக்கும் கற்கள் சிதறி, சாலையில் செல்வோரின் தலையை பதம் பார்க்கிறது. மரவனேரி சாலைக்கு மறுபிறப்பு உண்டா என பொதுமக்கள் மாநகராட்சியை கேள்வி கேட்கும் நிலை உள்ளது. மாநகராட்சி கமிஷனர் லட்சுமிபிரியா கூறுகையில்,'' மரவனேரி சாலை மோசமாகதான் உள்ளது. நானும் பார்த்தேன், விரைவில் அதற்கான நடவடிக்கையை எடுப்போம்,'' என, கூலாக பதிலளித்தார். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ள முடியாது. தேர்தல் முடியும் வரை மாநகராட்சி அதிகாரிகளும், மக்கள் பிரச்னையை கவனத்தில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us