Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/” சுரங்க நடவடிக்கைகள் பற்றி சி.பி.ஐ., விசாரித்தது என்ன? கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

” சுரங்க நடவடிக்கைகள் பற்றி சி.பி.ஐ., விசாரித்தது என்ன? கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

” சுரங்க நடவடிக்கைகள் பற்றி சி.பி.ஐ., விசாரித்தது என்ன? கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

” சுரங்க நடவடிக்கைகள் பற்றி சி.பி.ஐ., விசாரித்தது என்ன? கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

ADDED : செப் 24, 2011 12:07 AM


Google News
Latest Tamil News

புதுடில்லி:கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள் சம்பந்தப்பட்ட, கர்நாடகா பெல்லாரி மாவட்ட சுரங்க நடவடிக்கைகள் மற்றும் ஆந்திரா அனந்தப்பூர் சுரங்க நடவடிக்கைகளுக்கு இடையேயான தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இது தொடர்பாக சி.பி.ஐ., தன் பதிலை தெரிவிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவின் பெல்லாரி, சித்ரதுர்க்கா மற்றும் தும்கூர் மாவட்டங்களில் சுரங்கங்களை குத்தகைக்கு விட்டது தொடர்பான பிரச்னைகள் உட்பட, சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர, சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், அதிகாரக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.



இந்தக் குழு, கடந்த 21ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை நேற்று பரிசீலித்த தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கூறியதாவது:கர்நாடகாவின் பெல்லாரி மாவட்ட சுரங்க நடவடிக்கைகள் மற்றும் ஆந்திரா அனந்தப்பூர் மாவட்ட சுரங்க நடவடிக்கைகளுக்கு இடையே தொடர்புகள் இருப்பதாக, மத்திய அரசின் அதிகாரக் குழு தெரிவித்துள்ளது.



இந்த அறிக்கையில் கோர்ட் திருப்தி அடைந்துள்ளது. ஆந்திரா ஓபுலாபுரம் நிறுவனம் மூலமாக, அசோசியேட்டர் சுரங்க நிறுவனம் மற்றும் டெக்கான் மைனிங் சிண்டிகேட் போன்ற நிறுவனங்கள் இரும்புத் தாது எடுத்திருக்கலாம் என, நம்புகிறோம்.அதனால், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, நாங்கள் விரும்புகிறோம். முதல் தகவல் அறிக்கை தாக்கலுக்குப் பின், இந்த சுரங்க நடவடிக்கைகள் பற்றி சி.பி.ஐ., விசாரித்த தகவல்கள் என்ன? இது தொடர்பான பதிலை சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

மேலும், ரெட்டி சகோதரர்களின் ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் தொடர்பாக, மேற்கொண்ட விசாரணை குறித்த நிலை அறிக்கையையும் சி.பி.ஐ., தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டியும், அவரது மைத்துனர் சீனிவாச ரெட்டியும் கைது செய்யப்பட்டு, ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்த மாதம் 3ம்தேதி வரை கோர்ட் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆறு நாட்கள் இவர்கள் சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.



ஜனார்த்தன ரெட்டிக்கு சீனா, வியட்நாம், சிங்கப்பூர், துபாய், கம்போடியா ஆகிய நாடுகளில், நிறுவனங்கள் உள்ளன. சுரங்கத் தொழிலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட பணம், இந்த நிறுவனங்களில் பதுக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., சந்தேகிக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால், கூடுதலாக மேலும் ஒன்பது நாட்கள், இவர்களை சி.பி.ஐ., காவலில் வைத்திருக்க அனுமதிக்கும்படி, சிறப்பு கோர்ட்டில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை 29ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us