Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மதங்களை சங்கமிக்க வைத்த மதராஸ்

மதங்களை சங்கமிக்க வைத்த மதராஸ்

மதங்களை சங்கமிக்க வைத்த மதராஸ்

மதங்களை சங்கமிக்க வைத்த மதராஸ்

ADDED : ஆக 19, 2011 05:10 PM


Google News

ஆங்கிலேயர்களுக்கு மதராஸ் அறிமுகமாவதற்கு பல நூற்றாண்டுக்கு முன்பே மதராசப்பட்டினம் தமிழகத்தின் வடநாடாக அறிமுகமாகியிருந்தது.

அப்போது தமிழகம் மட்டுமல்லாமல், நாட்டின் பல பகுதிகளிலிருந்து; மதராஸிலுள்ள கோவில்களை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகைபுரிந்தனர். அதே போல் கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வழிபாட்டுத்தலங்கள் ஏராளமாக இருந்தது. சென்னையைப் போல உலகில் வேறெங்கும் இது போன்று மும்மதத்தினருக்கேற்ற வழிபாட்டுத்தலங்கள் ஒரே பகுதியில் இல்லை என்பது சென்னைவாசிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

அங்கப்பநாயக்கன் தெருவில் 8ம் நூற்றாண்டின் பெரிய மசூதி உள்ளது. ஆற்காடு நவாப் 19 ம் நூற்றாண்டில் கருங்கற்களால் அழகுற கட்டிபுதுப்பொலிவு ஏற்படுத்தினார். கோரல் மெர்ச்சென்ட் தெருவில் யூதர்கள் தொழுவதற்காக சர்ச் இருந்தது. அதே போல் ஆர்மேனியர்களுக்காக 1642ல் செயின்ட் மேரி ஆப்தி ஏஞ்சல்ஸ் கதீட்ரல் காபுச்சியன் பாதிரியாரால் கட்டப்பட்டது. 1810 ல் டேவிட்சன் தெருவில் பிராட்டஸ்டன்ட் சர்ச் கட்டப்பட்டது. இது தவிர பார்சிகளுக்கும், யூதர்களுக்கும், ஆர்மேனியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மதராசபட்டணத்தில் வழிபாட்டுத்தலங்கள் ஏராளமாக அமைந்திருந்தன.

சரித்திரத்தொன்மை வாய்ந்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும், திருவல்லிக்கேணி பார்த்தசாõரதி பெருமாள் கோவில், மருந்தீஸ்வரர் கோவில்கள் நூற்றாண்டுகள் கடந்தும், இன்றளவும் பக்தர்கள் அதிக அளவில் வழிபாடு செய்து வரும் வழிபாட்டுத்தலங்கள் ஆகும்.

பார்த்தசாரதி பெருமாள் சம்பிரதாயத்திலுள்ள மற்ற சுவாமிகளை போலல்லாமல், வித்தியாசமான மீசையோடு, முகத்தில் தழும்புகளோடு காட்சியளிக்கிறார். மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தபோது நடந்த நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சுவாமி உருவம் அமைந்துள்ளது. கோவில் <<9ம் நூற்றாண்டில் உருவானதாக வரலாற்றுச்சான்றுகள் குறிப்பிடுகின்றன. கோவிலின் திருக்குளத்தில் அல்லிமலர்கள் நிறைந்திருந்ததால், திருஅல்லிக்கேணி என்ற அழைக்கப்படுகிறது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும்.

மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில் பற்றி ஆறாம் நூற்றாண்டு இலக்கியங்களில் குறிப்பு உள்ளது. சிவன், பிரம்மனின் தலையைக் கொய்து கையிலேந்தி நின்றதால், கபாலீஸ்வரர் என்றழைக்கின்றனர். இது குறித்த விவரம் ஸ்கந்தபுராணம், கூர்மபுராணம், வராஹபுராணங்களில் குறிப்பிட்டுள்ளது. திருஞானசம்பந்தர், திருமழிசை ஆழ்வாரால் பாடப்பட்ட ஸ்தலம்.

அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகிய மூவரால் பாடப்பட்ட ஸ்தலம் திருவொற்றியூர் கோவில்; தொண்டை மண்டல 32 சிவ ஸ்தலங்களில் முக்கியமானது. சோழர் காலத்தில் கட்டப்பட்டது. பாண்டிய அரசன் ஜடவர்மன் திரிபுவனசக்கரவர்த்தி சுந்தரபாண்டித்தேவனால் கட்டப்பட்டது திருமுல்லை வாயில். மூலவராக மாசிலாமணீஸ்வரர் காட்சியளிக்கிறார்.

ராமாயணத்தை எழுதிய வால்மீகியால் வழிபாடு செய்யப்பட்ட மருந்தீஸ்வரர் கோவில் புரதானமானது. இங்கு தியாகராஜ சுவாமிகளின் உருவச்சிலை உள்ளது. இக்கோவில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. சைவமும், வைணவமும் தழைக்கவும்; இந்து ,கிறிஸ்தவ, இஸ்லாமிய மதம் தழைக்கவும் ஏராளமான வழிபாட்டுதலங்களை அமைத்த நம் முன்னோர் பெருமை சேர்த்துள்ளனர். அதை சரியான முறையில் பராமரித்து நம் பாரம்பரிய பெருமையை நாம் காப்போம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us