ADDED : செப் 25, 2011 11:09 PM
முதுநகர்:கடலூர் முதுநகரில் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள வாய்க்காலை ரயில்வே
மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து சீர் செய்து நிரந்தர தீர்வு காண
வேண்டும்.கடலூர் முதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் 60 பணியாளர்கள்
குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்புக்கு அருகே ரயில்வே மற்றும்
நகராட்சி இடத்தில் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால்
பராமரிக்கப்படாததால் காலப்போக்கில் கழிவுநீர் வாய்க்காலாக மாறியது.மேலும்
இந்த வாய்க்கால் செல்லும் இடம் நகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்குச்
சொந்தமான இடம் என்பதால் இரு துறையினரும் சேர்ந்து பராமரிப்பு பணியை
மேற்கொள்ள வேண்டும். இரு துறையினரின் அலட்சியப்போக்கால் வாய்க்கால்
தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமின்றி வாய்க்காலில்
மார்கெட்டில் வீணாகும் காய்கறி கழிவுகள், மீன், கோழி இறைச்சி கழிவுகள்
கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. வாய்க்காலில்
வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் பல இடங்களில் அடைபட்டது. இந்த
வாய்க்காலை ரயில்வே நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் ஜே.சி.பி.,
கொண்டு தற்காலிகமாக சரி செய்தது. நகராட்சிக்கு சொந்தமான இடத்தில்
வாய்க்காலை தூர்வாருவது மட்டுமின்றி ரயில்வே மற்றும் நகராட்சி நிர்வாகங்கள்
இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.