உள்ளாட்சி வார்டு எல்லைகள் மறுசீரமைப்பு : 96 கிராம ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பு
உள்ளாட்சி வார்டு எல்லைகள் மறுசீரமைப்பு : 96 கிராம ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பு
உள்ளாட்சி வார்டு எல்லைகள் மறுசீரமைப்பு : 96 கிராம ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பு
ADDED : செப் 16, 2011 11:36 PM
தர்மபுரி: தமிழகத்தில் 96 கிராம ஊராட்சிகள், அருகில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் வார்டு எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த தேர்தலில் கிராம ஊராட்சி வார்டுகளில் சில வார்டுகளில், இரு உறுப்பினர் என்ற முறை இருந்தது. இந்த முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு, ஒரு வார்டுக்கு ஒரு உறுப்பினர் என மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில ஊராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ,12 கிராம ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடனும், மூன்று ஊராட்சிகள் காஞ்சிபுரம் நகராட்சியுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 13 ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடனும், விழுப்புரம் மாவட்டம் கோவிலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஐந்து ஊராட்சிகள் விழுப்புரம் நகராட்சியுடனும், வேலூர் மாவட்டம் வேலூர் ஒன்றியத்தில் நான்கு கிராம ஊராட்சிகளும், கணியம்பாடி ஒன்றியத்தில் மூன்று ஊராட்சிகளும், காட்பாடி ஒன்றியத்தில் இரு ஊராட்சிகள் வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐந்து கிராம ஊராட்சிகள் ஈரோடு மாநகராட்சியுடனும், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எட்டு ஊராட்சிகள் திருப்பூர் மாநகராட்சியுடனும், கோவை மாவட்டத்தில் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் விலங்குறிச்சி கோவை மாநகராட்சியுடனும், திரச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நான்கு ஊராட்சிகள் திருச்சி மாநகராட்சியுடனும், கரூர் மாவட்டத்தில் தாந்தோணிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட சணப்பிரட்டி கரூர் நகராட்சியுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மூன்று ஊராட்சிகளும், மதுரை மேற்கு ஒன்றியத்தில் மூன்று ஊராட்சிகளும், திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் ஐந்து ஊராட்சி பகுதிகளும் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐந்து ஊராட்சிகள் துத்துக்குடி மாநகராட்சியுடனும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு ஊராட்சிகள் நாகர்கோவில் நகராட்சியுடனும், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை ஊராட்சி புதுக்கோட்டை நகராட்சியுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்பது ஊராட்சிகள் நாமக்கல் நகராட்சியுடனும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜுஜுவாடி, சென்னத்தூர், மூக்காண்டப்பள்ளி, ஆவலப்பள்ளி ஆகிய நான்கு ஊராட்சிகள் ஓசூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 15 மாவட்டங்களில், 96 கிராம ஊராட்சி எல்லைகள் அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், சில ஒன்றிய கவுன்சிலர் வார்டு எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், திருப்பூர் மற்றும் அரியலூர் ஆகிய இரு மாவட்டங்கள் புதிதாக உதயமானதால், கோவை, ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள சில மாவட்ட ஊராட்சி வார்டு எல்லைகளும், 96 கிராம ஊராட்சிகள், நகராட்சி, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால், சில மாவட்ட கவுன்சிலர் வார்டுகளும் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு மாறுதல்படி வரும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2 கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி உதயம் : கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி யூனியன் பெருமாத்தூர், இந்திரா நகர் ஆகிய இரு புதிய கிராம ஊராட்சிகளும், அரியலூர் மற்றும் திருப்பூர் ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், இவ்விரு மாவட்ட ஊராட்சிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிகள், வரும் 2011 உள்ளாட்சித்தேர்தலுக்கு பின் செயல்பாட்டுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.