மதுரை மாணவருக்கு எம்.இ., சீட் :ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை மாணவருக்கு எம்.இ., சீட் :ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை மாணவருக்கு எம்.இ., சீட் :ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : செப் 14, 2011 01:34 AM
மதுரை:எம்.இ., சீட் மறுக்கப்பட்ட மதுரை மாணவருக்கு புதிதாக ஒரு சீட்டை ஏற்படுத்தி, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் அங்கீகாரம் பெற, சென்னை அண்ணா பல்கலைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த சந்தோஷ்குமார் தாக்கல் செய்த ரிட் மனு:காரியாப்பட்டி சேது பொறியியல் கல்லூரியில் பி.இ., முடித்தேன்.
2011ல் படிப்பை முடித்தாலும், 1 முதல் 4வது செமஸ்டர்களுக்கான மதிப்பெண் பட்டியலை கல்லூரி நிர்வாகம் வழங்கவில்லை. விசாரித்த போது, மதிப்பெண் பட்டியலில் ஏற்பட்ட தவறை அண்ணா பல்கலை சரி செய்வதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.எம்.இ., படிப்பில் சேர கவுன்சிலிங் அண்ணா பல்கலையில் நடந்தது. இதில் கலந்து கொள்ள சென்ற போது, மதிப்பெண் பட்டியல் இல்லாததால், எம்.இ., சீட் வழங்க அண்ணா பல்கலை பதிவாளர், துணைவேந்தர், சேர்க்கை பிரிவு செயலாளர் மறுத்து விட்டனர். அண்ணா பல்கலை தவறால், எனக்கு எம்.இ., சீட் கிடைக்கவில்லை. சீட் வழங்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.திருநாவுக்கரசு ஆஜரானார்.நீதிபதி எஸ்.மணிக்குமார் பிறப்பித்த உத்தரவில், ''அண்ணா பல்கலை மதிப்பெண் குறிப்பிட்ட நேரத்திற்கு வழங்கப்படாததால், அவற்றை தாக்கல் செய்ய முடியவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலை, மாணவருக்கு ஒரு எம்.இ., சீட்டை உருவாக்கி ஒரு வாரத்திற்குள் அட்மிஷன் வழங்க வேண்டும். அதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அங்கீகாரம் பெற வேண்டும்,'' என்றார்.


