இலவச மடிக்கணினியில் தமிழ் விசைப்பலகை
இலவச மடிக்கணினியில் தமிழ் விசைப்பலகை
இலவச மடிக்கணினியில் தமிழ் விசைப்பலகை

சென்னை:தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினியை (லேப்-டாப்) கிராமப்புற மாணவர்களும் தடையோ, தயக்கமோ இல்லாமல் பயன்படுத்தும் வகையில், அவற்றில் தமிழ் ஒருங்குறியும் (யுனிகோடு), இயங்குமுறையும் (ஆபரேட்டிங் சிஸ்டம்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2, கலை மற்றும் அறிவியல், பொறியியல், பலதொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள். இவர்களால், ஆங்கிலத்திலேயே இருக்கும் மடிக்கணினி இயங்குமுறைகளை, கையாள முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்குத் தீர்வு காணும் வகையில், மேலே கண்ட பல்வேறு வசதிகளோடு, தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினியில், தமிழ் ஒருங்குறியும், தமிழ் இயங்குமுறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விசைப்பலகையும் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் கொண்டிருக்கும். தமிழ் எழுத்துக்கள், எழுத்துருக்கள் (பான்ட்), கணினிக்கு உத்தரவு கொடுக்கப் பயன்படும், 'டூல்ஸ்', கருத்தரங்குகளில் பயன்படுத்தப்படும், 'பவர் பாயின்ட்', கணக்கு வழக்குக்கு உதவும், 'ஸ்பிரட் ஷீட்' உள்ளிட்டவையும் தமிழில் இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், தமிழ்நாடு, 'வெர்ச்சுவல் அகடமி' வசம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் இதற்கான மென்பொருளை வடிவமைத்து, தயாரிப்பாளர்களிடம் தந்துவிட்டனர். அவர்கள், அதை மடிக்கணினியோடு இணைத்து வழங்கியுள்ளனர்.இதனால், கிராமப்புற மாணவர்களும், ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்களும், தமிழிலேயே கணினியை கையாள விரும்புபவர்களும், எந்த விதமான தயக்கமும், தடையுமின்றி, இலவச மடிக்கணினியைக் கையாளலாம்.