ADDED : செப் 06, 2011 11:58 PM
சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை, பல கட்டங்களாகப் பெய்து வருகிறது.
சில நாட்கள் இடைவெளிக்குப் பின், மீண்டும் பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்றுமுன்தினம் இரவு முதல், விடிய விடிய மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில், நேற்று மாலை முதல், இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியது. அதிகபட்சமாக, தோவாளையில் 10 செ.மீ., மழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த 24 மணிநேரத்தில், சீர்காழியில் 7, செம்பரம்பாக்கம், விருத்தாசலம், ஏற்காட்டில் 4, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், கடலூர், தொழுதூர், தஞ்சாவூர், ஓமலூர், கூடலூர் பஜார், நடுவட்டத்தில் 3, ராசிபுரம், சேலம், சின்னகல்லார், சிவகங்கை, திருப்பத்தூரில் 2, மதுராந்தகம், பூந்தமல்லி, திருவள்ளூர், கொள்ளிடம், திண்டுக்கல், நாமக்கல், கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில், தலா ஒரு செ.மீ., மழை பெய்தது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறும்போது,'பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். வெப்பச் சலனம் காரணமாக, சென்னை நகரின் பல்வேறு இடங்களில், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்' என்றார்.