Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சோலைக் காடுகள் குறித்த ஆராய்ச்சிதொடங்கியது :வனத்தை பெருக்க திட்டம்

சோலைக் காடுகள் குறித்த ஆராய்ச்சிதொடங்கியது :வனத்தை பெருக்க திட்டம்

சோலைக் காடுகள் குறித்த ஆராய்ச்சிதொடங்கியது :வனத்தை பெருக்க திட்டம்

சோலைக் காடுகள் குறித்த ஆராய்ச்சிதொடங்கியது :வனத்தை பெருக்க திட்டம்

ADDED : ஆக 24, 2011 12:10 AM


Google News

நகர விரிவாக்கத்தால் ஊட்டி, கொடைக்கானலில் உள்ள சோலைக் காடுகளின் பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது.

இதை தடுக்க நாட்டிலேயே முதல் முறையாக ஒரு ஆராய்ச்சி துவங்கப்பட்டுள்ளது. நதிகளின் நீராதாரமாக விளங்கும் சோலைக் காடுகள், நாட்டில், தமிழகத்தில் மட்டுமே உள்ளன. ஊட்டியில் 8,600 எக்டேர் பரப்பளவும், கொடைக்கானலில் 4,821 எக்டேர் பரப்பளவும் இருந்தன. நாளடைவில், வெளிநாட்டு மரங்களின் வரவு, நகர பெருக்கம், தீ, மேய்ச்சல் ஆகிய காரணங்களால் சோலைக் காடுகளின் பரப்பளவு குறைந்தது.



1992ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, ஊட்டி சோலைக் காடுகள் 4,225 எக்டேராக குறைந்தது. இதனால், சோலைக் காடுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சோலைக் காடுகள் மனிதனுக்கு எவ்வளவு மதிப்புள்ள பயன்களை தருகின்றன என்ற ஒரு ஆராய்ச்சி துவங்கப்பட்டுள்ளது. அரசு நிதியுடன், சமூக வனவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சங்கம், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. நேரிடையான பலன்கள், சீர்படுத்தும் சேவைகள், பண்பாட்டு சேவைகள், பல்லுயிர் தொகுப்பு உருவாவதற்கு மூலாதாரங்கள் என நான்கு பிரிவுகளாக, இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.



இந்த மையத்தின் அதிகாரிகள், இரண்டு ஆண்டுகளுக்கு நேரிடையாக இந்த ஆய்வை மேற்கொள்வர். பின், ஆய்வின் அறிக்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். சோலைக் காடுகள் மக்களுக்கு எவ்வளவு பயன்களை தருகின்றன என்பதை உணர்த்துவதற்கும், முக்கியத்துவத்தை அறிந்து, காடுகளை பாதுகாக்க மக்கள் முன்வருவதற்கும் இந்த ஆராய்ச்சி பயனுள்ளதாக இருக்கும்.



ஆராய்ச்சி குறித்து, சமூக வனவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சங்கத்தின் இயக்குனர் ஜெயினுலாவுதீன் கூறுகையில்,'வனத்தில் உள்ள பல்லுயிர் பெருக்கத்தின் சேவைகள் மனிதனுக்கு இன்றியமையாதவை. இந்த பயன்கள் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும், மறைமுகமாக மதிப்பிட முடியாத ஒன்று. இதுபோன்ற ஒரு ஆராய்ச்சி இதுவரை நடந்ததில்லை. மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு தனி கவனம் செலுத்த இது உதவியாக இருக்கும். சோலைக் காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதை தடுக்க, கட்டடங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், அடுத்த சில ஆண்டுகளில் சோலைக் காடுகளின் பரப்பளவு வெகுவாக குறைந்து, நிலச்சரிவு அதிகமாக ஏற்படும்,' என்றார்.



இதுவே முதல் முறை...

நாட்டில் பல வகையான காடுகள் இருந்தாலும், முதல் முறையாக சோலைக் காடுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தப் படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், இமயமலையில் உள்ள ஊசியிலை காடுகள் குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், ஊசியிலை காடுகளின் பரப்பளவு வெகுவாக குறைந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அறிக்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் காரணமாக, ஊசியிலை காடுகளை பாதுகாக்க, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும், தற்போது மூன்று மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், சோலைக் காடுகளை பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கவும் வாய்ப்புள்ளது.



எப்படி செய்யப் படுகிறது ஆராய்ச்சி...

ஊட்டி, கொடைக்கானலில் ஒரு மாதிரி தோட்டத்தை அமைத்து, அதன் மூலம் ஆராய்ச்சி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மரத்தின் அளவு, நகர பெருக்கம், நீரின் அளவு, மண் அரிப்பு, அசுத்தம் ஆகியவற்றை அதிகாரிகள் ஆராய்வர். பின், அதனை கொண்டு, மனிதனுக்கு எவ்வளவு மதிப்புள்ள பயன்களை தருகின்றன என்று கணக்கிடப் படும்.



கே.ஆறுமுகம்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us