Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/குண்டர் சட்டத்தில் தி.மு.க., பகுதி செயலாளர் கைது

குண்டர் சட்டத்தில் தி.மு.க., பகுதி செயலாளர் கைது

குண்டர் சட்டத்தில் தி.மு.க., பகுதி செயலாளர் கைது

குண்டர் சட்டத்தில் தி.மு.க., பகுதி செயலாளர் கைது

ADDED : ஆக 18, 2011 04:22 AM


Google News

மதுரை : மதுரை நகர் மூன்றாம் பகுதி தி.மு.க., செயலாளர் ஒச்சுபாலுவை நேற்று குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

மதுரை கரிமேட்டை சேர்ந்தவர் மோகன்தாஸ்காந்தி, 34. தனியார் வங்கியின் வசூல் பிரிவு ஊழியரான இவரிடம், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்த நாளை கொண்டாட ரூ. 50 ஆயிரம் கேட்டு ஒச்சுபாலுவும், கூட்டாளிகளும் 2010 ஜன.,22ல் தாக்கினர். இவ்வழக்கில், கடந்த ஆக.,6ல் ஒச்சுபாலு கைது செய்யப்பட்டார். மேலும், மதுரை வடக்குமாசி வீதியை சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் குமார்,45 என்பவர், வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து, வீடு மற்றும் நிலத்தை தன் பெயருக்கு எழுதி கொடுக்கும்படி மிரட்டிய வழக்கில் ஒச்சுபாலுவை ஆக.,10ல் போலீசார் கைது செய்தனர். தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரை நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.

அடுத்தது யார்?: ஏற்கனவே நிலமோசடி, இடம், கடை ஆக்கிரமிப்பு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, வி.கே.குருசாமி ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், தற்போது ஒச்சுபாலு மீதும் இச்சட்டம் பாய்ந்து உள்ளது. இதைதொடர்ந்து, மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தி.மு.க., தலைவர் இசக்கிமுத்துவும் இச்சட்டத்தில் கைதாக வாய்ப்பு உள்ளது.

ஒச்சுபாலு ஆஜர்: ஒச்சுபாலுவை மேலும் விசாரிக்க வேண்டி, இரு வழக்குகளிலும் போலீஸ் காவல் கோரி போலீசார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தனர். மனு விசாரணைக்கு வந்தபோது, ஒச்சுபாலுவை மாலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். ஒச்சுபாலு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்த மாஜிஸ்திரேட் (பொறுப்பு) கதிரவன், ஒரு நாள் மட்டும் மதுரை சிறையில் அவரை வைக்க உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us