Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பத்தாண்டுகளாக வருமான கணக்கு தாக்கல் செய்யாத முத்தமிழ் பேரவை: ஐந்து கோடி ரூபாய் வந்தது எப்படி?

பத்தாண்டுகளாக வருமான கணக்கு தாக்கல் செய்யாத முத்தமிழ் பேரவை: ஐந்து கோடி ரூபாய் வந்தது எப்படி?

பத்தாண்டுகளாக வருமான கணக்கு தாக்கல் செய்யாத முத்தமிழ் பேரவை: ஐந்து கோடி ரூபாய் வந்தது எப்படி?

பத்தாண்டுகளாக வருமான கணக்கு தாக்கல் செய்யாத முத்தமிழ் பேரவை: ஐந்து கோடி ரூபாய் வந்தது எப்படி?

ADDED : ஆக 18, 2011 12:21 AM


Google News
சென்னை : சென்னை, அடையாறு திரு.வி.க.பாலம் அருகில் ஆறு கிரவுண்ட் அரசு நிலத்தில், ஐந்து கோடி ரூபாய் செலவில் கலையரங்கத்தை, முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை கட்டி வருகிறது. ஆனால், 'இந்த அறக்கட்டளை கடந்த பத்தாண்டுகளாக வருமான கணக்குகளை தாக்கல் செய்யவில்லை' என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளைக்கு, 2009ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதியின் பரிந்துரையை ஏற்று, அடையாறு திரு.வி.க. பாலம் அருகில், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஆறு கிரவுண்ட் நிலம், ஆண்டுக்கு 1,000 ரூபாய் கட்டணத்தில், 30 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. இதில், நிலம் பெறும் தகுதி, குத்தகை தொகை மற்றும் கட்டுமான அனுமதி ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, ஜூலை 27 அன்று, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்த நிலத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலையரங்கம் ஒன்றை, அந்த அறக்கட்டளை கட்டி வருகிறது. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் தொடர்பான ஆட்சேபனைகளை மீறி, இந்த கட்டுமான திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்குமாறு, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு, வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது. வருமான வரித்துறை பதில் இது குறித்து, வருமான வரித்துறை துணை இயக்குனர் நம்பிராஜன், கடந்த 12ம் தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள்: தங்களது வருமான விவரங்களை, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்தவருக்கு அளிக்க, முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளையினர் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். இருப்பினும், அவர்களது ஆட்சேபத்துக்கு பொருத்தமான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அந்த அறக்கட்டளை குறித்த விவரங்கள், பின்வருமாறு அளிக்கப்படுகின்றன. முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை, 2000 - 2001ம் ஆண்டுக்கான தங்களது வருமான விவரங்களை தாக்கல் செய்தனர். அதில், அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் எவ்வித வருவாயும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் பின்னர், 2001- 2001 முதல் 2010 - 2011 வரையிலான எந்த நிதி ஆண்டுக்கும் அந்த அறக்கட்டளையின் வருமான விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து கோடி ரூபாய் வந்தது எப்படி? வருமான வரி விவரங்களை தாக்கல் செய்யாத, முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை, ஐந்து கோடி ரூபாய் செலவில், கலையரங்கம் கட்டி வருகிறது. இதற்கான பணம் எப்படி வந்தது என்பது புதிராக உள்ளது. சாதாரணமாக தனி நபர் ஒருவர் 50,000 ரூபாய் அல்லது, அதற்கு அதிகமான தொகையை செலவு செய்தாலும், வங்கியில் செலுத்தினாலும், அதற்கு 'பான் கார்டு' உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன. ஆனால், அரசுக்கு கணக்கு காட்டாமல், முத்தமிழ்ப் பேரவை சார்பில் பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதை, வரியேய்ப்பாகக் கருதி, இது குறித்து வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு நிலத்தை அளித்ததால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இதற்குக் காரணமான நபர்கள் யார் என்பது குறித்த பட்டியல், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் மூலம் நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக, பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கூறினார். ஒரு பக்கம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது, மற்றொரு பக்கம் வருமான விவரங்களை அரசுக்கு தெரிவிக்காமல் இருந்தது என, இருவிதமான வழக்குகளில் முத்தமிழ்ப் பேரவை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலத்தை திரும்பப் பெறுவது எப்போது? கடந்த, 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை. 2009ம் ஆண்டு, அமிர்தம் உள்ளிட்ட இதன் நிர்வாகிகள் கோரிக்கையின்படி, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் பரிந்துரையை ஏற்று, அடையாறு திரு.வி.க. பாலம் அருகில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஆறு கிரவுண்ட் நிலம், முத்தமிழ்ப் பேரவைக்கு வழங்கப்பட்டது. இங்கு ஐந்து கோடி ரூபாயில், கலையரங்கம் கட்டும் திட்டத்துக்கு, அனுமதி அளிக்கப்பட்டதில், கடலோர ஒழுங்குமுறை விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், சி.எம்.டி.ஏ., அளித்த ஆவணங்கள் மூலம், இது தொடர்பான தகவல்கள் வெளியானது. 'முத்தமிழ்ப் பேரவைக்கு நிலத்தை அளிப்பது தொடர்பான குத்தகை ஒப்பந்தத்தின் 22, 23வது பிரிவுகளின்படி முன்னறிவிப்பின்றி, ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஆறு கிரவுண்ட் நிலத்தை திரும்பப் பெற தங்களுக்கு அதிகாரம் உள்ளது. மேலும் அவ்வாறு நிலத்தை திரும்ப எடுத்துக் கொள்ளும் நிலையில், இதற்காக இழப்பீடு கோரவும் முத்தமிழ்ப் பேரவைக்கு உரிமை இல்லை. எனவே, அரசின் அறிவுறுத்தல் வந்தவுடன், நிலத்தை திரும்பப்பெற தயாராக இருக்கிறோம்' என, பொதுப்பணித் துறையினர் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us