/உள்ளூர் செய்திகள்/சேலம்/தேசியக்கொடி ஏற்ற தடை மாணவர்கள் சாலை மறியல்தேசியக்கொடி ஏற்ற தடை மாணவர்கள் சாலை மறியல்
தேசியக்கொடி ஏற்ற தடை மாணவர்கள் சாலை மறியல்
தேசியக்கொடி ஏற்ற தடை மாணவர்கள் சாலை மறியல்
தேசியக்கொடி ஏற்ற தடை மாணவர்கள் சாலை மறியல்
ADDED : ஆக 16, 2011 04:09 AM
இடைப்பாடி: கொங்கணாபுரம் ஊராட்சியில் உள்ள ஒரு துவக்கப்பள்ளியில், தேசியக்கொடி ஏற்ற விடாமல் பள்ளியின் முன்பு முற்களை போட்டு ஆக்கிரமிப்பு செய்ததால், அப்பள்ளி மாணவர்கள், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸாரின் சமாதானத்தை அடுத்து, நேரம் கடந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டது.கொங்கணாபுரம் ஒன்றியம், கோணசமுத்திரம் பஞ்சாயத்தில், பண்டாரங்காடு ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு அருகில் உள்ள முத்துசாமி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இப்பள்ளிக் கட்டிடம் கட்டக்கூடாது என, ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார் முத்துசாமி.இதுகுறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. நேற்று சுதந்திர தினத்தையொட்டி, இப்பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் வந்தனர். அப்போது, பள்ளியின் முன்பு முற்கள் போடப்பட்டு இருந்தது. அதனால், பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற முடியாமல் ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் காத்திருந்தனர்.முற்கள் அகற்றாததால், பொறுமையிழந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த இடைப்பாடி போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி முன்பு போடப்பட்டிருந்த முற்களையும் அப்புறப்படுத்தினர்.பின், வழக்கத்துக்கு மாறாக காலை 10 மணிக்கு மேல் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தேசியக்கொடி ஏற்ற தடையாக முற்களை போட்ட மரகதவள்ளி, காளியம்மாள், செங்காத்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பண்டாரங்காடு தலைமை ஆசிரியர் ஜோதி, இடைப்பாடி போலீஸில் புகார் செய்தார்.புகாரின்பேரில், இடைப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


