Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/திட்டம் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்

திட்டம் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்

திட்டம் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்

திட்டம் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்

ADDED : ஆக 15, 2011 02:06 AM


Google News
நாமக்கல்: ''ஒன்றரை ஆண்டுகளுக்குள், அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்படும்,'' என, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.

நாமக்கல் யூனியன், முதலைப்பட்டி பஞ்சாயத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், 9.75 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா மற்றும் மாரியம்மன் கோவில் வீதியில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட கான்கிரீட் சாலை திறப்பு விழா நடந்தது. டி.ஆர்.ஓ., சீதாலட்சுமி தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., ராமசாமி வரவேற்றார். எம்.எல்.ஏ., பாஸ்கர், கல்விக்குழு தலைவர் கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி, புதிய வகுப்பறை கட்டிடத்தையும், புதிய கான்கிரீட் சாலையையும் திறந்து வைத்து பேசியதாவது: தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன், முதியோர் ஓய்வூதியத் தொகையை, 500 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தினார். அதன் மூலம் தமிழகத்தில் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். மாணவ, மாணவியரின் கல்விக்காக, அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மாணவர்கள், அரசின் சலுகைகளை பெற்று சிறந்த முறையில் படித்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். இப்பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்து தரப்படும். மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு வருவாய்த்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பட்டா மாறுதல் காலதாமதமின்றி உடனடியாக வழங்கும் வகையில், அரசு விரைவு பட்டா மாறுதல் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் பட்டா மாறுதல் கோரும் மனுவை, வி.ஏ.ஓ.,விடம் வழங்க வேண்டும். பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்தந்தப் பள்ளியிலேயே ஜாதி, வருமானம், இருப்பிடம் ஆகிய சான்றிதழ்கள் வழங்குவதற்கான திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சான்றிதழ் குறித்த விண்ணப்பங்கள் மாணவ, மாணவியரிடம் இருந்து, செப்டம்பர் 30ம் தேதி பெறப்படும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது அக்டோபர் 15ம் தேதிக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, டிசம்பர் 31ம் தேதிக்குள் ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச்சான்று வழங்க ஏற்பாடு செய்யப்படும். பள்ளி மாணவர்களுக்கு நான்கு செட் இலவச சீருடை தற்போது வழங்கப்படுகிறது. கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை பொருளாதாரம் உயர, 60 ஆயிரம் கறவை மாடுகளும், 28 லட்சம் ஆடுகளும் வழங்கப்படஉள்ளது. முதற்கட்டமாக செப்டம்பர் 15ம் தேதி இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்குள் அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பஞ்சாயத்து தலைவர் பழனிவேல், அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் அல்லிமுத்து, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us