Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அடிப்படை வசதிகள் இன்றி கேள்விக்குறியான சுகாதாரம் : சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி

அடிப்படை வசதிகள் இன்றி கேள்விக்குறியான சுகாதாரம் : சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி

அடிப்படை வசதிகள் இன்றி கேள்விக்குறியான சுகாதாரம் : சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி

அடிப்படை வசதிகள் இன்றி கேள்விக்குறியான சுகாதாரம் : சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி

ADDED : ஆக 14, 2011 10:23 PM


Google News

பரமக்குடி : பரமக்குடி அடுத்த போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர், கழிப்பறை வசதிகள் இன்றி சுகாதாரத்தில் 'ஜீரோ' மார்க்குகளுடன் உள்ளதால் மாணவ, மாணவிகள் தவிக்கின்றனர்.

சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் பள்ளியின் அடிப்படை வசதிகளாக குடிநீர், கை கழுவ புழக்க நீர் மற்றும் கழிப்பறை இன்றி உள்ளது. இங்குள்ள அனைத்து மாணவர்களும் தங்கள் இயற்கை உபாதைகளுக்காக மரங்களின் ஓரங்களிலும், புல் வெளிகளிலும் ஒதுங்குகின்றனர். மாணவிகள் நிலை கண்டால் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. மேலும் பள்ளியில் கை, கால், தட்டுகள் கழுவுவதற்கும் தண்ணீர் இல்லாமல் உள்ளதால், மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து பள்ளியின் எதிரில் போலீஸ் ஸ்டேசன் முன்பாக உள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டி அருகில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். பின்னர் அங்குள்ள குடிநீர் குழாயில் கசியும் நீரில் தங்கள் தட்டுகள் மற்றும் கைகளை கழுவுகின்றனர். ஏற்கெனவே சுகாதாரமற்ற இடத்தில் அமர்ந்து சாப்பிடும் மாணவர்கள் அரைகுறையாக கிடைக்கும் நீரில் கை, தட்டுகள் கழுவுவதால் தொற்று நோய் அபாயம் உள்ளது. மேலும் பள்ளியில் கழிப்பறை இல்லாததால் கண்ட இடங்கள் கழிப்பறையாக மாறியுள்ளது. பள்ளியில் சாப்பிட இட வசதி இல்லாததால் சில மாணவர்கள் பள்ளியின் உடைந்த காம்பவுண்ட் சுவரில் அமர்ந்து உண்கின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் ஒவ்வொரு நாளும் தங்களுக்கான குடிநீரை வாட்டர் கேன்களில் கொண்டு வந்து குடிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பல கி.மீ., தொலைவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வருபவர்களாக இருப்பதால், கொண்டு வரும் நீர் தீர்ந்து விட்டால் தெருக்குழாய்களிலும், கடைகளிலும் சுகாதாரமற்ற நீரை பருக வேண்டியுள்ளது. ஒரு பஸ் மட்டும் இயங்கும் கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு கிளம்ப அவரவர் ஊரில் இருந்து காலை 7மணிக்கே புறப்படுகின்றனர். பின்னர் பள்ளி முடிந்து இருள் சூழும் மாலை வேலையில் வீடு திரும்ப வேண்டியுள்ளது. ஆகவே ஒவ்வொரு நாளும் 12மணி நேரம் வரை பள்ளியில் நாளை கழிக்கின்றனர். இதனால் மாணவ, மாணவிகளின் மீது அக்கறையுடன் செயல்பட்டு பள்ளி கல்வித்துறை நிர்வாகம் அடிப்படை வசதிகள் இழந்து தவிக்கும் சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர், கழிப்றை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மாநிலத்தில் முதலிடம் பிடிக்க முனையும் அதிகாரிகள் இது போன்ற விசயங்களில் அக்கறை காட்டாத பட்சத்தில் மாணவர்களின் கவனம் திசை திரும்ப வாய்ப்புள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us