"மாஜி' ராஜாவின் அண்ணனிடம் வருமான வரித்துறை கிடுக்கி
"மாஜி' ராஜாவின் அண்ணனிடம் வருமான வரித்துறை கிடுக்கி
"மாஜி' ராஜாவின் அண்ணனிடம் வருமான வரித்துறை கிடுக்கி
ADDED : ஆக 09, 2011 12:15 AM
திருச்சி : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் சகோதரரிடம், திருச்சியில் வருமான வரித்துறையினர் நேற்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
கடந்த 2 மாதமாக '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு, வரவு - செலவுகள் தொடர்பாக ராஜாவின் மனைவி பரமேஸ்வரி, அவரது சகோதரர்கள் கலியபெருமாள், சென்னை அண்ணா பல்கலை பருவநிலை மாற்றம் ஆய்வுத்துறை ராமச்சந்திரன் ஆகியோரிடம், வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ராஜாவின் குடும்பத்தினர் நான்கு முறை, திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், ராஜாவின் சகோதரர் ராமச்சந்திரனை விசாரணைக்கு வரும்படி, வருமானவரித்துறை அதிகாரிகள் அழைத்திருந்தனர். அதன்படி, அவர் திருச்சி வருமானவரித் துறை அலுவலகத்தில், நேற்று ஆஜரானார். அவரிடம் மாலை 3 மணி வரை விசாரணை நடந்தது. அப்போது அவரது சொத்துக்கள் தொடர்பாக, பல கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறியதாகவும் தெரிகிறது. தொடர்ந்து ராஜாவின் குடும்பத்தாரிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால், அவர்கள் மீது பெரிய அளவில் வருமான வரிஏய்ப்பு தொடர்பான வழக்குகள் பாயலாம் அல்லது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், அவரது குடும்பத்தார் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படலாம் என்று கருதப்படுகிறது.


