PUBLISHED ON : ஆக 09, 2011 12:00 AM

தமிழக முதல்வர் ஜெயலலிதா: மாநில அரசுக்குள்ள மொத்த கடன் அளவு, 1 லட்சத்து, 18 ஆயிரத்து, 610 கோடி ரூபாய். இது, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், 20.39 சதவீதமே இருக்கும். இது, 13வது நிதிக்குழு நிர்ணயித்துள்ள அளவான, 24.50 சதவீதத்துக்கும் குறைவானது தான்.
டவுட் தனபாலு: இந்தக் கடன், ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டினப்போ, முந்தைய முதல்வரும் இதைத் தான் சொன்னாரு... இப்போ, 1 லட்சத்து, 18 ஆயிரம் கோடியான பிறகு, நீங்களும் அதையே சொல்றீங்க... அடுத்த அஞ்சு வருஷமும், இதே கதையைச் சொல்லாம இருந்தா சரி...!
தி.மு.க., தலைவர் கருணாநிதி: தி.மு.க., ஆட்சியின்போது உண்மையாகவே தங்கள் சொத்துக்களை விற்றவர்கள் கூட, அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையோடு வீண் புகார் கொடுக்கின்றனர். அதனால் தான், தி.மு.க., ஆட்சியில், பொய் புகார் கூறுவோருக்கு தண்டனை அளிக்க ஒரு சட்டமே கொண்டு வரப்பட்டது.
டவுட் தனபாலு: பொய் புகார் கொடுத்தா, தண்டனை கொடுக்கணும்கிறது சரி தான்... பொய்யான புகார் கொடுக்கிறாருன்னு பொய் சொல்லிட்டாங்கன்னா என்ன செய்றது...?
இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன்: சிவகாசியில், பட்டாசு தொழிற்சாலைகளின் விபத்தால் தொடர்ந்து மக்கள் மரணமடைவது வழக்கமாகி வருகிறது. இதற்கு, அரசு சார்பில் போதிய கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததே காரணமாகத் தெரிகிறது.
டவுட் தனபாலு: ஆமா... ஒரு விபத்து நடந்த உடனே, எல்லாரும் அரசைக் குற்றம் சொல்ல ஆரம்பிச்சுடுங்க... அதே ஆலை மேல, சாதாரணமான ஒரு நாள்ல, பாதுகாப்பு பற்றி ஆய்வுக்குப் போனா, 'அதிகார வர்க்கத்தின் கெடுபிடி ஒழிக; தமிழக அரசே அடக்குமுறையைக் கைவிடு'ன்னு கொடி பிடிக்க ஆரம்பிச்சுடுவீங்க... என்ன தான் செய்யும் அரசு...?


