சேலம் மத்திய சிறையில் அமைச்சர் ஆய்வு
சேலம் மத்திய சிறையில் அமைச்சர் ஆய்வு
சேலம் மத்திய சிறையில் அமைச்சர் ஆய்வு
ADDED : ஆக 08, 2011 03:04 AM
சேலம்: சேலம் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், கைதிகளிடம் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
சேலம் மத்திய சிறையில், அமைச்சர் செந்தமிழன் நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது, கோவை டி.ஐ.ஜி.,(பொறுப்பு) கோவிந்தராஜ் தலைமையில், சிறை இசைக்குழுவினர் சார்பில் பேண்ட் வாத்தியம் முழங்க, அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர், தண்டனை கைதிகள் அடைக்கப்பட்ட செல்லுக்கு நேரில் சென்று, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, சொந்த ஊரில் உள்ள சிறைக்கு மாற்றும்படி, கைதிகள் சிலர் கோரிக்கை விடுத்தனர். அதோடு, 3 கைதிகள் புகார் மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களை அமைச்சர் செந்தமிழன் பெற்றுக் கொண்டார். தங்கவேலு என்கிற தண்டனை கைதி, 21 ஆண்டுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து விட்டதாக கூறி, தன்னை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சரிடம் முறையிட்டார். அதேபோல், 15 ஆண்டுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும், 10க்கும் மேற்பட்ட கைதிகளும், தங்களை விடுவிக்க உதவிடும்படி முறையிட்டனர். அவர்களிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் செந்தமிழன் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து, சிறையினுள் ஆய்வு செய்தார். சிறை கண்காணிப்பாளர் பரமேஸ்வரன், கூடுதல் கண்காணிப்பாளர் ரவீந்திரன். ஜெயிலர் ஊர்மிளா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உடன் இருந்தனர்.


