/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/2012ம் ஆண்டிற்கான காலண்டர் ஆல்பம் ஆடிப்பெருக்கில் சிவகாசியில் வெளியீடு2012ம் ஆண்டிற்கான காலண்டர் ஆல்பம் ஆடிப்பெருக்கில் சிவகாசியில் வெளியீடு
2012ம் ஆண்டிற்கான காலண்டர் ஆல்பம் ஆடிப்பெருக்கில் சிவகாசியில் வெளியீடு
2012ம் ஆண்டிற்கான காலண்டர் ஆல்பம் ஆடிப்பெருக்கில் சிவகாசியில் வெளியீடு
2012ம் ஆண்டிற்கான காலண்டர் ஆல்பம் ஆடிப்பெருக்கில் சிவகாசியில் வெளியீடு
ADDED : ஆக 04, 2011 11:50 PM
சிவகாசி:2012ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம், ஆடிபெருக்கான நேற்று
சிவகாசியில் வெளியிடப்பட்டது. தினசரி, மாத காலண்டர் தயாரிப்பில் 30க்கும்
மேற்பட்ட கம்பெனிகள் சிவகாசியில் உள்ளன. இங்கு தயாராகும் காலண்டர்கள்,
தமிழ்நாடு,புதுச்சேரியின் தேவையில் 90 சதவீதத்தை நிறைவு செய்வதோடு,
சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. இத்
தொழிலில் மட்டும் ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் மதிப்பில் வியாபாரம்
நடக்கிறது.இதன் மூலம் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு
பெறுகின்றனர்.ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கில் (ஆடி 18 ) காலண்டர், டைரி
ஆல்பங்கள் (கேட்லாக்) தயாரித்து வெளியிடுவதை காலண்டர் கம்பெனிகள் வழக்கமாக
கொண்டுள்ளன. இந்த ஆண்டும் ஆடிப்பெருக்கான நேற்று, தங்களின் ஏஜென்ட்கள்,
வாடிக்கையாளர்கள் முன்னிலையில் , 200 ரகங்கள் உள்ளடங்கிய 2012ம் ஆண்டுக்கான
வார்னிஸ், ரியல்ஆர்ட், பாயில்ஸ், லேசர் பாயில்ஸ், எம்போஸ் பாயில்ஸ், டபுள்
பாயில்ஸ், டை கட்டிங் என அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய புது ஆல்பங்களை
வெளியிட்டன . இதற்காக நிறுவனம் முன் அலங்கார வளைவுகள் அமைத்து, காலண்டர்
மாடல்களையும் வடிவமைத்திருந்தனர். ஆல்பத்தை பெறும் ஏஜென்ட்கள் தமிழ்நாடு,
வெளிமாநிலம் சென்று டிச., 15 வரை ஆர்டர் பெறுவார்கள்.
ஆர்டர்கள்
கிடைத்ததும் காலண்டர் தயாரிப்பு பணி சிவகாசியில் மும்முரம் அடையும்.
சிவகாசி கற்பகா காலண்டர் உரிமையாளர் கே.ஜெயசங்கர் கூறுகையில், ''ஒவ்வொரு
ஆண்டும் காலண்டர் விலை உயர்வு 4 முதல் 6 சதவீதமாக இருக்கும். இந்த ஆண்டு
மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பேப்பர் டன் 32
ஆயிரமாக இருந்தது. தற்போது டன் 38 ஆயிரத்து 500 , ஆர்ட் பேப்பர் டன் 54
ஆயிரத்திலிருந்து 59 ஆயிரம், பைண்டிங் பயன்படுத்தும் கலிக்கோ 20 மீட்டர்
260லிருந்து 460 ரூபாயாக உயர்ந்துள்ளது. தொழிலாளர் சம்பளமும் பல மடங்கு
உயர்ந்துள்ளதால், இந்த ஆண்டு 15 சதவீத விலை உயர்வு தவிர்க்க முடியததாகி
விட்டது. ஜவுளி கடைகள், நகை கடைகளும் மட்டும் 60 சதவீதம் உற்பத்தி தேவை
உள்ளது,'' என்றார்.