செம்பு உலோகத்தை தங்கமாக்க முயற்சி:பாஸ்பரஸ் வெடித்து ஒருவர் பலி
செம்பு உலோகத்தை தங்கமாக்க முயற்சி:பாஸ்பரஸ் வெடித்து ஒருவர் பலி
செம்பு உலோகத்தை தங்கமாக்க முயற்சி:பாஸ்பரஸ் வெடித்து ஒருவர் பலி
ADDED : ஜூலை 29, 2011 11:12 PM
திருநெல்வேலி:நெல்லை அருகே, செம்பு பாத்திரத்தை தங்கமாக மாற்றும் முயற்சியில், பாஸ்பரஸ் வெடித்து ஒருவர் பலியானார்; மற்றொருவர் படுகாயமடைந்தார்.
திருநெல்வேலி பேட்டையை அடுத்த சுத்தமல்லி, செந்தமிழ்நகரை சேர்ந்தவர் அழகியநம்பி. இவரது உறவினர் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் சங்கர், 27. இவரும், இவரது நண்பர் சென்னையைச் சேர்ந்த கணேஷ் பொன்னம்பலம், 47, என்பவரும் நெல்லைக்கு வந்திருந்தனர்.இருவருக்கும் ஜோதிடம், மாந்திரீகத்தில் நம்பிக்கை அதிகம். சிவப்பு பாஸ்பரசை, செம்புப் பாத்திரத்தில் போட்டு அதிக சூடாக்கினால், செம்பு உலோகம், 'தங்கமாக' மாறும் என, யாரோ யோசனை கூறியுள்ளனர்.அழகியநம்பியின் வீட்டுக்கு பின்புறமுள்ள காலிமனையில் வைத்து, நேற்று மாலை, ஒரு செம்புப் பாத்திரத்தில் சிகப்பு பாஸ்பரசை போட்டு, தீ மூட்டி சூடுபடுத்தினர். சூடு அதிகரித்ததால், செம்புப் பாத்திரம் பயங்கர சத்தத்துடன் வெடித்து, பாஸ்பரஸ் ரசாயனம் சிதறியது. அருகில் இருந்த இருவரும் பலத்த காயமுற்று, ஆபத்தான நிலையில், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, கணேஷ் பொன்னம்பலம் இறந்தார். பேட்டை போலீசார் விசாரித்தனர்.