Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தண்டனை கைதியானார் பொட்டுசுரேஷ் ஜாமீனை எதிர்பார்த்து தளபதி விரக்தி

தண்டனை கைதியானார் பொட்டுசுரேஷ் ஜாமீனை எதிர்பார்த்து தளபதி விரக்தி

தண்டனை கைதியானார் பொட்டுசுரேஷ் ஜாமீனை எதிர்பார்த்து தளபதி விரக்தி

தண்டனை கைதியானார் பொட்டுசுரேஷ் ஜாமீனை எதிர்பார்த்து தளபதி விரக்தி

ADDED : ஜூலை 26, 2011 12:53 AM


Google News

திருநெல்வேலி : பொட்டுசுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால், நேற்று பாளையங்கோட்டை சிறையில் அவரை யாரும் சந்திக்க முடியவில்லை.

மதுரையில் நிலமோசடியில் கைதான தி.மு.க., நிர்வாகிகள் தளபதி, பொட்டு சுரேஷ் (சுரேஷ்பாபு), கிருஷ்ண பாண்டியன், கொடி சந்திரசேகர் ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஜூலை 20 ல் மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்து பேசினார். பொட்டுசுரேஷ் மீது மதுரையை சேர்ந்த அமர்நாத் என்பவர் தந்த மோசடி புகாரில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் மதுரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திருமால்அழகர், எஸ்.ஐ., முருகேசன் ஆகியோர் நேற்று காலையில் பாளை சிறைக்கு வந்து பொட்டு சுரேஷிடம் முறைப்படி கைது செய்வதாக தெரிவித்தனர்.



அதன்பின், சற்று நேரத்தில் மதுரை, ஊமச்சிகுளம் டி.எஸ்.பி., பாண்டி சிறைக்கு வந்தார். அவர் பொட்டுசுரேஷ் மீது மதுரை கலெக்டர் சகாயம் உத்தரவின்பேரில், குண்டர் சட்டத்தில் ஒரு ஆண்டுக்கு சிறையில் அடைப்பதற்கான உத்தரவை வழங்கினார். அதன் ஒரு நகல் பொட்டுசுரேஷூக்கும் வழங்கப்பட்டது. தளபதி உள்பட நால்வரும் தற்போதும் தண்டனை கைதிகளுக்கான 8வது பிளாக்கில் திறந்த சிறையில் உள்ளனர். பொட்டுசுரேஷ் தண்டனை கைதியாக மாறினாலும், தொடர்ந்து நால்வரையும் ஒரே பிளாக்கில் வைக்கவே முடிவுசெய்துள்ளனர்.



நேற்று காலையில் தூத்துக்குடி தி.மு.க.,மாவட்ட செயலர் பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், கைதிகளின் உறவினர்கள் வந்திருந்தனர். இவர்களில் பலர் தளபதியை மட்டுமே சந்தித்தனர். அவரிடம் பழங்கள், பிஸ்கட் பைகளை வழங்கினர். விசாரணை கைதிகளை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், தண்டனை கைதிகளை செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் தண்டனை கைதியாக மாறிவிட்ட பொட்டுசுரேஷை நேற்று யாரும் பார்க்கவில்லை.



நால்வரையும் மதுரை சிறையில் அடைத்தால், பார்வையாளர்கள் கூட்டம் அதிகம் வரும் என பாளையங்கோட்டைக்கு மாற்றினர். ஆனால், பாளையங்கோட்டைக்கும் தினமும் மாஜி அமைச்சர்கள், மாஜி எம்.எல்.ஏ.,க்கள் வந்தவண்ணம் உள்ளனர். நேற்று பாளையங்கோட்டை சிறைக்கு அழகிரி வருவதாக தி.மு.க.,வினர் தகவலை கிளப்பிவிட்டனர். இதனால் பத்திரிகை,மீடியாக்கள் சிறையில் குவிந்தனர். இருப்பினும் அவர் வரவில்லை.



ஜாமீன் எதிர்பார்த்த தளபதி: தளபதி உள்ளிட்டோருக்கு நேற்று ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. காலை, மதியம், பிற்பகல் என சந்தித்தவர்களிடம் தமக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதா என கேட்டுக் கொண்டே யிருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை தான் வருவதாக தகவல் தெரிவித்தனர். இதனால், தளபதி மனமுடைந்து காணப்பட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us