Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உலக சுற்றுலா வரைபடத்தில் குற்றாலம் : சாரல் விழாவில் அமைச்சர்கள் உறுதி

உலக சுற்றுலா வரைபடத்தில் குற்றாலம் : சாரல் விழாவில் அமைச்சர்கள் உறுதி

உலக சுற்றுலா வரைபடத்தில் குற்றாலம் : சாரல் விழாவில் அமைச்சர்கள் உறுதி

உலக சுற்றுலா வரைபடத்தில் குற்றாலம் : சாரல் விழாவில் அமைச்சர்கள் உறுதி

ADDED : ஜூலை 24, 2011 01:42 AM


Google News

குற்றாலம் : 'உலக சுற்றுலா வரைபடத்தில் குற்றாலத்தை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என குற்றாலத்தில் நடந்த சாரல் திருவிழாவில் அமைச்சர்கள் செந்தூர் பாண்டியன், கோகுல இந்திரா பேசினர்.குற்றாலத்தில் நேற்று சாரல் திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் நடராஜன் வரவேற்றார்.



சுற்றுலாத்துறை மற்றும் பண்பாட்டு துறை முதன்மை செயலாளர் ஜெயக்கொடி, சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குநர் மோகன்தாஸ், நெல்லை எம்பி.,ராமசுப்பு, எம்.எல்.ஏ.,க்கள் மைக்கேல்ராயப்பன், துரையப்பா, டவுன் பஞ்., உறுப்பினர் கே.பி.குமார்பாண்டியன் வாழ்த்தி பேசினர்.விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா பேசும் போது, ''உலகம் போற்றும் சுற்றுலா ஸ்தலமாக குற்றாலம் விளங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு இக்கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும். சுற்றுலா துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.,கள் பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க ஆக்கப்பூர்வமாகன ஒத்துழைப்பை வழங்க வேண்டும். குற்றாலத்தில் தீம் பார்க் அமைக்க எம்.எல்.ஏ.சரத்குமார் கூறினார். இது பற்றி பரிசீலனை செய்யப்படும். வெளிநாட்டினர் அதிகளவில் வரும் பகுதியாக இது மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.



கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசும் போது, ''இயற்கை வளம் பாதுகாக்கப்படும். இதற்கு எவ்வழிகளில் பாதகம் ஏற்படுத்த முயன்றாலும் அதனை தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்றாலம் உலக சுற்றுலா வரைபடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் பேசும் போது, ''குற்றாலம் மேம்படுத்தப்பட வேண்டும். குற்றாலத்தில் சீசன் காலத்தில் மட்டும் அல்லாமல் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறந்த சுற்றுலா ஸ்தலமாக உலகில் இடம் பெற வேண்டும். இங்கு தீம் பார்க் அமைக்க வேண்டும். அணைக்கட்டு பகுதிகளில் எல்லாம் பார்க் அமைக்கப்பட வேண்டும். குற்றாலத்திற்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.



முதல்வர் ஜெயலலிதா கூறியது போல பசுமை நிறைந்த பகுதியாக மாற்றப்படவேண்டும்.பூமி வெப்பமாதலை தடுக்க நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். தென்காசி பகுதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து 21 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக பத்திரிகையில் (தினமலர்) வெளியாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் ஜாலியாக இருக்கும் போது கட்டுபாடுகளை மீறாமல் இருக்க வேண்டும். குற்றாலத்தில் போதுமான மருத்துவ வசதிகள் அமைக்கப்பட வேண்டும்'' என்றார்.நிகழ்ச்சிகளை மக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோவன் தொகுத்து வழங்கினார். முதல் நாள் நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் இசை சங்கமம், சிங்காரி மேளம், பரதநாட்டிய நிகழ்ச்சி, ஸ்ரீகாந்த்தேவாவின் இன்னிசை கச்சேரி ஆகியன நடந்தது.



டிஆர்ஓ ரமணசரஸ்வதி நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் ஏபிஆர்ஓ நவாஸ்கான், வேளாண்துறை இணை இயக்குநர் தேவசகாயம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன் மற்றும் அதிமுகவை சேர்ந்த வக்கீல் மாடசாமி பாண்டியன், தேர்தல் பணிக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், நகர செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பன், சங்கரபாண்டியன், கவுன்சிலர்கள் அசோக்பாண்டியன், முருகராஜ், மேலகரம் பஞ்., துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், வி.பி.மூர்த்தி, மாவட்ட முன்னாள் மாணவரணி செயலாளர் சீனிவாசன், இலஞ்சி ஆர்.பி.பள்ளி தலைமையாசிரியர் முத்தையா, எக்ஸ்னோரா மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, செயலாளர் சங்கரநாராயணன், அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன்.கடையநல்லூர் தொகுதி அ.தி.மு.க.செயலாளர் பொய்கை மாரியப்பன், இணை செயலாளர் பி.வி.நடராஜன், எல்ஐசி முருகையா, நகர துணை செயலாளர் ராஜா, நகர எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் கிருஷ்ணமுரளி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் பரமசிவன், மாவட்ட பிரதிநிதி லட்சுமணன், அண்ணாமலை பல்கலைக்கழக தகவல் மையம் வெள்ளத்துரை, விநாயகமூர்த்தி, ராஜா, அப்துல்வகாப், கணபதிசுந்தரம், கிருஷ்ணன், ரெட்டியார்பட்டி நாராயணன், சமக மாவட்ட தலைவர் தங்கராஜ், அமைப்பு செயலாளர் காளிராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us