பட்டாசு வாங்க வந்தவரிடம் ரூ. 3.30 லட்சம் பறித்து ஓட்டம்
பட்டாசு வாங்க வந்தவரிடம் ரூ. 3.30 லட்சம் பறித்து ஓட்டம்
பட்டாசு வாங்க வந்தவரிடம் ரூ. 3.30 லட்சம் பறித்து ஓட்டம்
ADDED : செப் 14, 2011 01:13 AM
சிவகாசி :பட்டாசு வாங்க சிவகாசிக்கு வந்த சென்னை வியாபாரியிடம், 3.30 லட்ச ரூபாயை பறித்து கொண்டு ஓடிய நபரை போலீசார் தேடுகின்றனர்.சென்னை எம்.ஜி.ஆர்.நகர் திருஞானசம்பந்தர் ரோட்டில் வசிப்பவர் மீனாட்சி சுந்தரம், 33.
இவர், சேப்பாக்கம் திருவள்ளுவர் சாலையில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அப்பகுதியில் வசிக்கும், 450 நபரிடம், தீபாவளி பட்டாசுக்காக, 600 ரூபாய் வீதம் வசூலித்துள்ளார். தன் சொந்தபணம், 60 ஆயிரம் சேர்த்து, 3.30 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு, பட்டாசு வாங்க சிவகாசி வந்தார்.அங்குள்ள நாடார் லாட்ஜில் தங்கிய அவர், மதியம் 12.40 மணிக்கு திருத்தங்கல் ரோட்டில் உள்ள பட்டாசு கம்பெனிக்கு ஆட்டோவில் சென்றார். திருத்தங்கல் ரோட்டில் ஆட்டோவை விட்டு இறங்கி, ஆட்டோக்கான கட்டணத்தை கொடுக்க, பணப்பையை கீழே வைத்தப்படி, சட்டைபையிலிருந்து பணம் எடுத்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் , 3.30 லட்ச ரூபாய் வைத்திருந்த பையை தூக்கி கொண்டு ஓடினார்.ஆட்டோ டிரைவரும் அங்கிருந்து வேகமாக ஆட்டோவை ஓட்டிச் சென்றார். பட்டப் பகலில் நடந்த பணம் பறிப்பு சம்பவத்தால், வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.தீபாவளி சீசன் துவங்கியதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் அதிகம் சிவகாசி வருகின்றனர். இவர்கள் பாதுகாப்பாக சென்று திரும்பும் வகையில், சிவகாசி, திருத்தங்கலில் போலீஸ் ரோந்து பணியை பகலிலும் தீவிரப்படுத்த வேண்டும், சிவகாசி பஸ் ஸ்டாண்ட் புறக்காவல் நிலையத்தில், 24 மணி நேரமும் போலீசார் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.