/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மன்னார் வளைகுடாவில் சுற்றுச்சூழல், மீன்வளம் மேம்படுத்த இந்தியா-இலங்கை ஆலோசனைமன்னார் வளைகுடாவில் சுற்றுச்சூழல், மீன்வளம் மேம்படுத்த இந்தியா-இலங்கை ஆலோசனை
மன்னார் வளைகுடாவில் சுற்றுச்சூழல், மீன்வளம் மேம்படுத்த இந்தியா-இலங்கை ஆலோசனை
மன்னார் வளைகுடாவில் சுற்றுச்சூழல், மீன்வளம் மேம்படுத்த இந்தியா-இலங்கை ஆலோசனை
மன்னார் வளைகுடாவில் சுற்றுச்சூழல், மீன்வளம் மேம்படுத்த இந்தியா-இலங்கை ஆலோசனை
ADDED : செப் 06, 2011 12:18 AM
ராமேஸ்வரம் : மன்னார் வளைகுடா பகுதியில் கடல் சுற்றுச்சூழல் மற்றும் மீன்வளத்தை மேம்படுத்துவது குறித்த இந்திய-இலங்கை பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று துவங்கியது.
இந்தியா-இலங்கைக்கு இடையே வளம் மிகுந்த மன்னார் வளைகுடாவின் தமிழக கடலோரப் பகுதியில் குருசடைதீவு, வான்தீவு, முயல்தீவு உட்பட 21 பவளப்பாறை தீவுகள் உள்ளன. இங்கு 3,600 வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. பெருகி வரும் மீன்பிடிப்படகுகள், கப்பல்கள் இயக்கத்தாலும், கடலோர பகுதியில் ரசாயனக்கழிவு நீர் கலப்பதாலும், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளாலும் அரிய உயிரினங்கள் அழிந்து வருகின்றன. கடல் சுற்றுச்சூழல் மாசடைந்து கடல் வளமும், மீன்வளமும் குறைந்து வருகின்றன. இதையடுத்து ராமேஸ்வரத்தில், மன்னார் வளைகுடா கடல் நீடித்த சுற்றுச்சூழல் முறைகள் மற்றும் வளங்கள் குறித்த தேசிய பங்குதாரர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று துவங்கியது. இலங்கையை சேர்ந்த இந்திர ரணசிங்கே தலைமையில் இலங்கையின் பல்வேறு துறைகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகளும், குடால்ப் ஹெர்மன்ஸ், நரேஷ் சதுர்வேதி தலைமையில் இந்திய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய காப்பகம், தமிழக மீன்வளத்துறை உள்ளிட்ட மத்திய, மாநில அரசின் கடல்சார் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் மன்னார் வளைகுடா கடல் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வளம் மேம்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.