ADDED : செப் 14, 2011 03:08 AM
திருப்போரூர்:பிளஸ் 2 மாணவரை, இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்த,
விவசாயி கைது செய்யப்பட்டார். அவரது மைத்துனர், கோர்ட்டில் சரணடைந்தார்.
திருப்போரூர் அடுத்த குமிழி ஊராட்சிக்குட்பட்ட, ஒத்திவாக்கம் கிராமத்தைச்
சேர்ந்தவர் வேதகிரி. இவரது மனைவி இந்திரா. இவர்களின் மகன் வினோத், 19.
நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.
இவர்கள் வீட்டின் அருகில் வசிப்பவர் துரைகண்ணு. அவரது மனைவி அம்சா. கடந்த
சில மாதங்களாக, இந்திராவிற்கும், அம்சாவிற்கும் இடையே தகராறு
ஏற்பட்டது.கடந்த 10ம் தேதி காலை, இருவருக்கும் இடையே, வழக்கம் போல் பிரச்னை
ஏற்பட்டது. இது குறித்து அம்சா, சென்னை மாடம்பாக்கத்தில் வசிக்கும், தன்
அண்ணன் மோகனிடம் தெரிவித்தார். அவர் ஒத்திவாக்கம் கிராமத்திற்கு வந்தார்.
அன்று இரவு 7 மணிக்கு, துரைகண்ணு தன் மைத்துனர் மோகனை அழைத்துக் கொண்டு,
வேதகிரி வீட்டிற்கு சென்றார்.அங்கு இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு
ஏற்பட்டது.
வேதகிரி மகன் வினோத், 'வீட்டிற்கு வந்து ஏன் தகராறு
செய்கிறீர்கள்?' எனக் கேட்டார். ஆத்திரமடைந்த மோகன், துரைகண்ணு, தாங்கள்
கொண்டு வந்திருந்த, இரும்பு பைப்பால், வினோத்தை தாக்கிவிட்டு தப்பியோடினர்.
இதில், பலத்தக் காயமடைந்த அவர், மயங்கி விழுந்தார். வீட்டிலிருந்தவர்கள்,
அவரை சிகிச்சைக்காக, மறைமலைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில்
சேர்த்தனர். அங்கு கிசிச்சைப் பலனின்றி, நேற்று காலை வினோத் இறந்தார்.
திருப்போரூர் போலீசார், மோகனை கைது செய்தனர். தலைமறைவான துரைகண்ணு, நேற்று,
திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் சரணடைந்தார்.