Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மாநில "ரேங்க்' பெற்ற பார்வையற்ற மாணவி தற்கொலை

மாநில "ரேங்க்' பெற்ற பார்வையற்ற மாணவி தற்கொலை

மாநில "ரேங்க்' பெற்ற பார்வையற்ற மாணவி தற்கொலை

மாநில "ரேங்க்' பெற்ற பார்வையற்ற மாணவி தற்கொலை

ADDED : ஜூலை 15, 2011 04:28 AM


Google News
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்ற பார்வையற்ற மாணவி, தற்கொலை செய்து கொண்டார்.தேன்கனிக்கோட்டை அடுத்த கீர்திம்மனட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணப்பா. இவரது மனைவி பாக்கியம்மா. இவர்களுக்கு பவித்ரா, ஆஷா, அனுராதா, நேத்ராவதி ஆகிய நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.மூத்த மகள் பவித்ரா, 20, இரண்டாவது மகள் ஆஷா ஆகியோர், பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர்கள். ஆஷா, 13 கி.மீ., தொலைவில் உள்ள தளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து சென்று படித்தார். சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில், 1,028 மதிப்பெண் எடுத்தார்.மாவட்ட அளவில், மாற்று திறனாளி பிரிவில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று மாணவி ஆஷா சாதனை படைத்தார். இவர் அதிக மதிப்பெண் எடுத்தும் ஏழ்மை காரணமாக, மேற்படிப்புக்கு வசதியில்லாமல் தவித்தார்.இது குறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதை பார்த்த ஏராளமான தொண்டுள்ளம் படைத்தவர்கள், மாணவி ஆஷாவின் மேற்படிப்புக்கு உதவி செய்தனர்.

தேன்னிக்கோட்டையில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் மணிமாறன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில், ஆஷாவுக்கு நடந்த பாராட்டு விழாவின் போது, ஆஷாவின் மேற்படிப்புக்கு பலர் உதவி செய்தனர். பலரின் உதவியுடன், ஓசூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் பி.காம்., சேர்ந்தார்.பார்வையற்ற மாணவியின் கல்விக்கு அக்கல்லூரி நிர்வாகமும் உதவி செய்தது. கல்லூரி விடுதியில் தங்கி, ஆஷா படித்து வந்தார். கடந்த 8ம் தேதி கல்லூரியில் இருந்து ஆஷாவை, அவரது தந்தை ராமகிருஷ்ணப்பா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.கடந்த 10ம் தேதி, கோவையில் ஒக்கலிகா சங்க நிர்வாகிகள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், ஆஷா பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.

நேற்று முன்தினம், பக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற ஆஷா, அங்கு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.உறவினர்கள் அவரை, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.உறவினர்களிடம் விசாரித்தபோது, 'உலகத்தில் கை, கால் இல்லாமல் கூட பிறக்கலாம்; கண் தெரியாமல் மட்டும் பிறக்கக்கூடாது என, பாட்டியிடம் விரக்தியில் ஆஷா கூறியுள்ளார்' என்று தெரிவித்தனர்.ஆஷா, எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us