ADDED : ஜூலை 11, 2011 11:51 PM
ஓசூர் : 'ஓசூர் பகுதியில் மொபைல்ஃபோன் கடைகள், பெட்ரோல் பங்குகளில் ரகசிய
கண்காணிப்பு காமிரா பொருத்தி சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க
வேண்டும்' என போலீஸார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்த
விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் கண்ணப்பன்
தலைமை வகித்தார். மொபைல்ஃபோன் கடைகள், லாட்ஜ்கள், பெட்ரோல் பங்க்
உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் கண்ணப்பன்
பேசியதாவது:
மொபைல்ஃபோன் கடைகள், லாட்ஜ்களில் குற்ற சம்பவங்கள் நடக்க அதிக சந்தர்ப்ப
சூழ்நிலைகள் காணப்படுகிறது. அதனால், அவற்றின் உரிமமையாளர்கள் குற்ற
செயல்களை தடுப்பதில் போலீஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மொபைல்ஃபோன்
கடைகள், பெட்ரோல் பங்குகளில் கட்டாயம் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த
வேண்டும். மொபைல்ஃபோன் கடைகளில் கோமிராவுடன் கூடிய 'டிவி'க்கள் வைத்து
நிகழ்ச்சிகளை பதிவு செய்ய வேண்டும். பழைய மொபைல்ஃபோன்கள் வாங்கும் நபர்கள்
முழு முகவரி, அவர்களுடைய ஃபோட்டோ வாங்கி வைத்து கொள்ள வேண்டும். சந்தேக
நபர்களை பதிவு செய்து போலீஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும். பெட்ரோல்
பங்குகளில் டீஸல், பெட்ரோல் போடும் போது டிரைவர்கள், முகம் தெளிவாக
தெரியும் வண்ணம் கேமராக்களை பொருத்த வேண்டும். பெட்ரோல், டீஸல் போடும்
நபர்களுடைய பெயர்கள், முகவரியை பெற்று பில்கள் போட்டு வழங்க வேண்டும்.
மொபைல்ஃபோன் கடைகளில் சர்வீஸ் செய்ய வரும் மொபைல்ஃபோன்களில் சர்ச்சைக்குரிய
வீடியோ மற்றும் ஃபோட்டோ காட்சிகள் இருந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல்
தெரிவிக்க வேண்டும். பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வரும்
சந்தேக நபர்கள் குறித்து தகவல் கொடுக்க வேண்டும். லாட்ஜ்களில் தங்கி
இருப்பவர்கள் முழுமையாக முகவரிகளை பதிவு செய்ய வேண்டும். சந்தேக நபர்கள்
தங்க வந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்
பேசினார்.