Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/தென்கொரியாவுக்கு சென்றார் ஜனாதிபதி பிரதிபா

தென்கொரியாவுக்கு சென்றார் ஜனாதிபதி பிரதிபா

தென்கொரியாவுக்கு சென்றார் ஜனாதிபதி பிரதிபா

தென்கொரியாவுக்கு சென்றார் ஜனாதிபதி பிரதிபா

ADDED : ஜூலை 25, 2011 12:19 AM


Google News
Latest Tamil News

சியோல் : தென் கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, துப்பாக்கி குண்டுகள் முழங்க, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தென்கொரியா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளில் ஒரு வார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக, அவர், தென்கொரியாவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். பிரதிபாவின் கணவர் தேவிசிங் பாட்டீல், பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் மகாதேவ் கண்டேலா மற்றும் எம்.பி.,க்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்றனர். அங்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தென்கொரிய வெளிவிவகாரத் துணை அமைச்சர் மின் டாங்க் சியோக் கலந்து கொண்டு, பிரதிபா பாட்டீலை வரவேற்றார். 26ம் தேதி வரை தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதிபா பாட்டீல், இந்தியா-தென்கொரியா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, அந்நாட்டு அதிபருடன் பேச்சு நடத்துகிறார். மேலும், அந்நாட்டு தொழிலதிபர்கள் குழுவையும் சந்தித்துப் பேசுகிறார்.

இதைத் தொடர்ந்து, 27ம் தேதிமுதல் 30ம் தேதி வரை பிரதிபா பாட்டீல், மங்கோலியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அந்நாட்டுடன் வர்த்தகம், கலாசாரம், பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்துகிறார். அந்நாட்டு அதிபர் மற்றும் அரசியல் தலைவர்களுடன் பேச்சு நடத்தும் பிரதிபா, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுகிறார்.

பிரணாப், லண்டன் பயணம்: நிதித்துறையில், இங்கிலாந்து நாட்டுடன் உள்ள உறவை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சு நடத்துவதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவருடன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் கோபாலன், தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு, செபி தலைவர் சின்கா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரும் சென்றுள்ளனர்.

பிரணாப் முகர்ஜி தலைமையிலான இக்குழுவினர், இங்கிலாந்து அமைச்சருடன் பேச்சு நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, சர்வதேச பொருளாதார பிரச்னைகள், இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான உள்கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us