/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உள்ளாட்சியில் பதவியை பிடிக்க தேர்தல் களம் காணும் உறவுகள்உள்ளாட்சியில் பதவியை பிடிக்க தேர்தல் களம் காணும் உறவுகள்
உள்ளாட்சியில் பதவியை பிடிக்க தேர்தல் களம் காணும் உறவுகள்
உள்ளாட்சியில் பதவியை பிடிக்க தேர்தல் களம் காணும் உறவுகள்
உள்ளாட்சியில் பதவியை பிடிக்க தேர்தல் களம் காணும் உறவுகள்
ADDED : அக் 08, 2011 12:14 AM
சூலூர் : சூலூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பதவியை பிடிக்க, அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களின், நெருங்கிய உறவினர்களை அதிகளவில் வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளனர்.சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில், 171 ஊராட்சி வார்டு உறுப்பினர், 17 ஊராட்சி தலைவர், 14 ஒன்றிய கவுன்சிலர், இரு மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிளுக்கு 800க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.
பிரசாரமும் சுறுசுறுப்பாக துவங்கியுள்ளது; தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இத்தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளை பிடிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான ஊராட்சிகளில், இட ஒதுக்கீடு முறையால் தாங்கள் போட்டியிட முடியாத இடங்களில், நெருங்கிய உறவினர்களை களத்தில் இறக்கியுள்ளனர்.மயிலப்பட்டி ஊராட்சியில் தி.மு.க., பிரமுகர் செல்வராஜ், தனது மனைவி ராதாமணியை இரண்டாவது முறையாக தலைவர் பதவிக்கு களம் இறக்கியுள்ளார். காங்கயம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவராக இருந்த கொ.மு.க., பிரமுகர் செல்வராஜ், தனது மனைவி செல்வநாயகியை ஊராட்சி தலைவர் பதவிக்கு நிறுத்தியுள்ளார்; அவரும் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இரு முறை ஊராட்சி தலைவராக இருந்த அ.தி.மு.க., பிரமுகர் ரங்கசாமியின் மனைவி சுப்பாத்தாள் போட்டியிடுகிறார்.அரசூர் ஊராட்சி தலைவராக இருந்த தி.மு.க., பிரமுகர் அன்பரசு, தன் மீதான புகார் காரணமாக இந்த தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவானது. அதனால், தனது சகோதரர் கோவிந்தராஜை களத்தில் இறக்கியுள்ளார். ராசிபாளையம் ஊராட்சியில் 20 ஆண்டுகளுக்கு மேல் தலைவராக இருந்த தி.மு.க., பிரமுகர் மணியன், தனது அண்ணன் மகன் பூபதி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால், தான் களத்தில் இருந்து ஒதுங்கியுள்ளார். பட்டணம் ஊராட்சியில் தி.மு.க., பிரமுகர் செல்வக்குமார், தலைவர் பதவிக்கு தனது மனைவி கோமதியை இரண்டாவது முறையாக களம் இறக்கியுள்ளார். கிட்டாம்பாளையம் ஊராட்சியில் அரசியல் கட்சி பிரமுகர் ராமசாமியின் மனைவி ஜோதிமணி இரண்டாவது முறையாக களம் காணுகிறார். கலங்கல் ஊராட்சியில் முன்னாள் தலைவர்களான அ.தி.மு.க., பிரமுகர்கள் ரங்கநாதன் மனைவியும், நடராஜ் மனைவியும் தலைவர் பதவியை பிடிக்க மோதுகின்றனர்.


