திருப்பூர் சாயப்பட்டறைகளை திறக்க விரைவில் தீர்வு காண மத்திய அரசு முடிவு
திருப்பூர் சாயப்பட்டறைகளை திறக்க விரைவில் தீர்வு காண மத்திய அரசு முடிவு
திருப்பூர் சாயப்பட்டறைகளை திறக்க விரைவில் தீர்வு காண மத்திய அரசு முடிவு
ADDED : ஜூலை 21, 2011 01:14 AM
புதுடில்லி: திருப்பூரில் மூடப்பட்ட சாயப்பட்டறைகளை திறக்க, தொழில்நுட்ப ரீதியான தீர்வு காண, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திருப்பூர் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நொய்யல் ஆற்றில் கலப்பதால், பாசன வசதி பெறும், ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் சாயப்பட்டறைகளை மூட, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. கடந்த ஜனவரி முதல், 730 சாயப்பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். இப்பிரச்னை குறித்து, மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த்சர்மாவும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனும், டில்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து ஆனந்த் சர்மா குறிப்பிடுகையில், ''இப்பிரச்னைக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண முடிவு செய்துள்ளோம். இதற்காக தமிழக அதிகாரிகள், ஆடை தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டியை அமைத்துள்ளோம். விரைவில் தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இதற்கு தீர்வு காணப்படும். இதன் மூலம் மூடப்பட்ட ஆலைகள் திறக்கப்பட்டு தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப வழி காணப்படும்'' என்றார். திருப்பூரில் தற்போது சாயக்கழிவை சுத்திகரிப்பு செய்யும், 18 இயந்திரங்கள் உள்ளன. ஆனால், இவை சாயக்கழிவை முற்றிலுமாக சுத்திகரிப்பதில்லை. போதுமான தொழில் நுட்ப வசதியில்லாததால் இந்த குறைபாடு உள்ளது. இதை நிவர்த்தி செய்ய, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சாயப்பட்டறைகள் மீது விதிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் குறித்த விதிமுறைகளை தளர்த்துவது குறித்து தொழிற்சாலை துறை மற்றும் வனத்துறை அமைச்சகங்களுக்கிடையே நிலவி வந்த முட்டுக்கட்டைகளை நீக்கவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


