மகளிர் சுகாதார வளாகங்களை புதுப்பிக்க ஜெ., உத்தரவு
மகளிர் சுகாதார வளாகங்களை புதுப்பிக்க ஜெ., உத்தரவு
மகளிர் சுகாதார வளாகங்களை புதுப்பிக்க ஜெ., உத்தரவு
ADDED : ஜூலை 26, 2011 09:37 PM
சென்னை:தமிழகம் முழுவதும், ஊரகப் பகுதிகளில் உள்ள மகளிர் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களை, மூன்று மாதங்களுக்குள் புதுப்பித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு செய்திக் குறிப்பு:கிராமப் பகுதிகளில் உள்ள மகளிருக்கு, பாதுகாப்பு மற்றும் தனிமை வசதியுடன் கூடிய கழிவறைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அடிப்படையில், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் அமைக்கும் திட்டத்தை, 2001ல், முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.இந்த வளாகங்கள், எட்டு கழிவறைகள், 2 குழந்தைகளுக்கான கழிவறைகள், மூன்று குளியலறைகள், ஒரு மின்சார அறை மற்றும் துணி துவைப்பதற்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டன.
2004ம் ஆண்டுக்குள், தமிழகத்தில் மொத்தமுள்ள, 12 ஆயிரத்து, 618 ஊராட்சிகளிலும், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டு, பெண்கள் பயனடைந்து வந்தனர்.கடந்த ஐந்தாண்டுகளில், இந்த மகளிர் சுகாதார வளாகங்கள், பராமரிப்பின்மை, தண்ணீர் பற்றாக்குறை, மின்வசதியின்மையால், போதிய அளவுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை, முதல்வர் ஜெயலலிதா கேள்விப்பட்டார்.இதையடுத்து, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்களை புதுப்பிக்க முயற்சிகளை எடுத்து, மூன்று மாதங்களுக்குள் அவை அனைத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளார். மேலும், சுகாதார வளாகங்களை பயன்படுத்துவது தொடர்பாக, கிராமப் பெண்களிடையே விழிப்புணவு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, கிராமப் பகுதிகளில் சுகாதார பழக்க வழக்கங்கள், கழிப்பிட வசதிகளை பயன்படுத்துதல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீய விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஊக்குவிக்கப்படும். மூன்று மாதங்களுக்குள் அனைத்து வளாகங்களும் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.