மாணவர் ஹால் டிக்கெட் மாணவிக்கு வந்தது
மாணவர் ஹால் டிக்கெட் மாணவிக்கு வந்தது
மாணவர் ஹால் டிக்கெட் மாணவிக்கு வந்தது
ADDED : ஜூலை 24, 2011 07:03 PM
திட்டக்குடி:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலட்சியத்தால், தர்மபுரி மாணவரின் ஹால் டிக்கெட், முகவரி மாறி, திட்டக்குடி மாணவிக்கு வந்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப்-2 தேர்வு, வரும் 30ம் தேதி நடக்கிறது.
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், ஹால் டிக்கெட் அனுப்பும் பணி நடந்து வருகிறது.குரூப்-2 தேர்வுக்கு, கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கூத்தப்பன்குடிகாட்டைச் சேர்ந்த ஜெயராமன் மகள் சுஜாதா விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கடந்த வாரம் தபால் மூலம், குரூப்-2 தேர்விற்கான ஹால் டிக்கெட் வந்தது. அவருக்கான தேர்வு மையம் விருத்தாசலம் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., ரிஜிஸ்தர் எண், 10607104.இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து அதே சுஜாதாவிற்கு தபால் மூலம் வேறு ஒரு ஹால் டிக்கெட் வந்தது. இதனால் குழப்பமடைந்த அவர், ஹால் டிக்கெட்டை பிரித்து பார்த்த போது, அதில் தேர்வர் பெயர் பெரியசாமி என்றும், அவரது புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. தேர்வு மையம் ஸ்ரீ விஜய வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காந்திநகர், தர்மபுரி என்றிருந்தது. மேலும் அவரது ரிஜிஸ்டர் எண், 00417037.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலட்சியத்தால், பெரியசாமியின் ஹால் டிக்கெட்டில் தவறுதலாக சுஜாதாவின் முகவரி உள்ளது. பெரியசாமியின், 'ஹால் டிக்கெட்' சுஜாதாவிற்கு வந்துள்ளதால், பெரியசாமிதேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.