Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தாமதமாகும் நீதி!மகளிர் கோர்ட்டில் நிரந்தர நீதிபதி இல்லைநூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தேக்கம்

தாமதமாகும் நீதி!மகளிர் கோர்ட்டில் நிரந்தர நீதிபதி இல்லைநூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தேக்கம்

தாமதமாகும் நீதி!மகளிர் கோர்ட்டில் நிரந்தர நீதிபதி இல்லைநூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தேக்கம்

தாமதமாகும் நீதி!மகளிர் கோர்ட்டில் நிரந்தர நீதிபதி இல்லைநூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தேக்கம்

ADDED : ஜூலை 25, 2011 01:54 AM


Google News

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவாக நீதிவழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு நிரந்தர நீதிபதி இல்லை; எண்ணற்ற வழக்குகள் தேங்கியிருப்பதால், நீதிக்காக பெண்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்து, பாதிக்கப்பட்டோருக்கு துரிதமாக நீதி வழங்கும் வகையில் தமிழகத்தில் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இதன்படி, கடந்த 2001ல் கோவையில் மகளிர் சிறப்பு நீதிமன்றம் துவக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக கலாவதி பணியாற்றினார்.



வரதட்சணை கொடுமை, கொலை, கற்பழிப்பு, ஆதாயக் கொலை, ஆள் கடத்தல், கட்டாய திருமணம் உள்ளிட்ட வழக்குகள் இந்த நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் மாதம் தோறும் ஆறு முதல் 10 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் கூறப்பட்டன. பல முக்கிய வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் தியாகராஜன், தட்சிணாமூர்த்தி, தங்கராஜ் ஆகியோர் குற்றவாளிகளுக்கு ஆயுள், தூக்கு தண்டனைகளை விதித்தனர்.மேற்கண்ட நீதிபதிகள் அடுத்தடுத்து மாறுதலாக சென்றபின், இந்நீதிமன்றத்துக்கு நிரந்தர நீதிபதி நியமிக்கப்படவில்லை. முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி, குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த தனிக்கோர்ட் நீதிபதி ஆகியோர், கூடுதல் பொறுப்பாக மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் வழக்குகளையும் விசாரித்தனர். நிரந்தர நீதிபதி நியமிக்கப்படாததால், தற்போது வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.



கடந்த ஆறு மாதமாக இந்நிலை தொடர்கிறது. தற்போது, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சேஷசாயி, மகளிர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கோவை நகரில் பள்ளிக் குழந்தைகள் இருவரை கடத்தி கொலை செய்த வழக்கு, கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, மகளிர் சிறப்பு கோர்ட்டில் 90க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் புதிதாக விசாரணைக்கு வந்துள்ளன.சமீபநாட்களாக, கோவையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கொலை, வழிப்பறி, கொள்ளை குற்றங்களால் எண்ணற்ற பெண்கள் தினமும் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பான வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.



இந்த வழக்குகளும் விசாரணைக்கு வரும்பட்சத்தில் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. வழக்கு விசாரணைக்காக பெண்கள் தினமும் நீதிமன்றத்துக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி கிடைக்க, கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு நிரந்தர நீதிபதியை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையும், எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களும், அவர்களுக்காக ஆஜராகும் வக்கீல்களும், கோவை வக்கீல்கள் சங்கமும், சென்னை ஐகோர்ட்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



- எம்.கனகராஜ் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us