ADDED : ஆக 25, 2011 11:28 PM
துடியலூர் :மேட்டுப்பாளையம் சாலை விரிவுபடுத்தும் பணியை விரைந்து முடிக்க
கோரி, மேட்டுப்பாளையம் சாலை பாதுகாப்பு சங்கத்தினர் துடியலூர் பஸ்
ஸ்டாண்டில் 'பிளக்ஸ் போர்டு' வைத்துள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில்,
நரசிம்மநாயக்கன்பாளையம் வரை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த 49 கோடியே
65 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணி துவங்கி 14 மாதங்களாகியும்
இன்னும் முடியவில்லை.
கட்டி முடிக்கப்பட வேண்டிய 7 பெரிய பாலங்களில் ஒரே ஒரு பாலத்துக்கான பணி
மட்டும் நிறைவடைந்துள் ளது. பல இடங்களில் ஏற்கனவே சாலையில் இருந்த
கான்கிரீட் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் புதிய சாலைகள்
அமைக்கப்படாததால் புழுதி காற்றும், தூசும் வாகனங்களில் செல்பவர்களை
படாய்படுத்துகிறது. மேட்டுப்பாளையம் ரோடு விரிவுபடுத்தும் பணியை விரைந்து
நிறைவேற்ற பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட பல
போராட்டங்களையும் நடத்தியும் பலன் இல்லை. ஆமை வேகத்தில் நடக்கும்
இப்பணியால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேட்டுப்பாளையம்
சாலை பாதுகாப்பு சங்கத்தினர் துடியலூர், என்.ஜி.ஜி.ஓ., காலனி கேட், ஜி.என்.
மில்ஸ் பிரிவு, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிளக்ஸ் போர்டு
வைத்துள்ளனர். இதில், இலவசமாக ஆஸ்துமா, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்கள்
பெற, மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வாருங்கள், தரமற்ற சாலைகளால் ஆதாயம்
பெறப்போவது யார் உள்ளிட்ட பல்வேறு வாசகத்துடன் போர்டு வைத்துள்ளனர். இது
குறித்து மேட்டுப்பாளையம் சாலை பாதுகாப்பு சங்க தலைவர் தேவேந்திரன்
கூறுகையில், ''மேட்டுப்பாளையம் சாலை விரிவுப்படுத்தும் பணியை அரசு உடனடியாக
விரைவு படுத்த வேண்டும்'' என்றார்.