ADDED : ஆக 11, 2011 11:14 PM
திருப்பூர் : கோர்ட் உத்தரவை மீறி, திருப்பூரில் சட்ட விரோதமாக ரகசியமாக இயங்கிய சாய ஆலைகள் 'சீல்' வைக்கும் பணி நேற்று நடந்தது.
சாயக்கழிவு நீர் பிரச்னையில், கோர்ட் உத்தரவையடுத்து, திருப்பூர் பகுதியில் சாய ஆலைகள் மூடப்பட்டன. அவற்றின் மின் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.கோர்ட் உத்தரவு, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கைக்கு பின்னும் பல இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும், உரிமம் பெறாத சாய ஆலை கள் இயங்கின. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஜூன் மாதம், இதுகுறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. வருவாய்த்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியத் தினரும் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டனர். சட்ட விரோதமாக இயங்கும் 21 சாய ஆலைகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டும், அதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டினர். சமீபத்தில் திருப்பூருக்கு வந்த, மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் சங்கர், அதிகாரிகளுக்கு 'டோஸ்' விட்டார். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக, மாசுக்கட்டுப்பாடு வாரியம் பறக்கும் படை மற்றும் வருவாய் துறையினர், சாலை ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்தனர். கடந்த 10ம் தேதி, 14 சிறிய சாய ஆலைகள் 'சீல்' வைக்கப்பட்டன. திருப்பூர் நகரம், வீரபாண்டி, தொட்டிபாளையம் மற்றும் முதலிபாளையம் பகுதிகளில் இயங்கிய மற்ற ஏழு சாய ஆலைகள் நேற்று 'சீல்' வைக்கப்பட்டன.