Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் செப்டம்பரில் நடத்த தயாராகிறது கமிஷன்

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் செப்டம்பரில் நடத்த தயாராகிறது கமிஷன்

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் செப்டம்பரில் நடத்த தயாராகிறது கமிஷன்

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் செப்டம்பரில் நடத்த தயாராகிறது கமிஷன்

ADDED : ஆக 03, 2011 12:46 AM


Google News

சென்னை : திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் செப்டம்பர் மாத இறுதியில் நடக்க வாய்ப்புள்ளது.

அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளதால், அதற்கு முன் இடைத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது. திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மரியம்பிச்சை, அமைச்சர் பதவியை ஏற்ற ஒரு வாரத்தில் விபத்தில் இறந்தார். இதையடுத்து, திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதி உறுப்பினர் பதவி காலியானது. இந்த இடத்திற்கான இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, வரும் நவம்பர் மாதத்துக்குள், புதிய எம்.எல்.ஏ.,வை தேர்வு செய்ய வேண்டும்.



வரும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்பதாலும், நவம்பரில் மழைக் காலம் துவங்குவதற்கு முன் இடைத்தேர்தலை நடத்துவதே சரியென, தேர்தல் கமிஷன் கருதுகிறது. பொதுவாகவே, எந்த மாநிலத்துக்காவது சட்டசபை பொதுத் தேர்தல் நடத்தப்படும் போது, நாடு முழுவதும் காலியாக உள்ள எம்.பி., எம்.எல்.ஏ., பதவிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்படும். ஆனால், தற்போதைய நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான், சில மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது.



திருச்சி மேற்கு தொகுதிக்கு, நவம்பருக்குள் இடைத்தேர்லை நடத்த வேண்டும் என்பதால், செப்டம்பர் மாதமே நடத்தி முடிக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் துவக்கிவிட்டது. ஓட்டுச்சாவடிகளை அடையாளம் காணுதல், ஜி.பி.எஸ்., மூலம் கண்டறிந்து, அதற்குகேற்ப ஓட்டுச்சாவடிகளை மாற்றியமைத்தல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுப்பதிவு அதிகாரிகளைத் தேர்வு செய்தல், அவர்களுக்கான பயிற்சிகளைத் துவக்குதல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயாராக வைத்திருத்தல் போன்ற பணிகளை, தற்போது தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.



இதுபற்றி, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் கேட்ட போது, ''தேர்தல் தேதியை கமிஷன் தான் அறிவிக்கும். எங்களைப் பொறுத்தவரை, தேர்தல் நடைமுறைகளுக்கு 21 நாட்கள் போதுமானது. அதாவது, மனு தாக்கல் துவங்குவதில் இருந்து, ஓட்டு எண்ணிக்கை வரை, 21 நாட்கள் போதுமானது. எனவே, ஒரு மாதத்துக்கு முன்பாக தேதியை அறிவித்தால் கூட, தேர்தலை நடத்தத் தயாராகி விடுவோம்,'' என்றார்.



-பாஸ்கர் பாபு-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us