தேர்தல் அலுவலருக்கு அழகிரி எச்சரிக்கை
தேர்தல் அலுவலருக்கு அழகிரி எச்சரிக்கை
தேர்தல் அலுவலருக்கு அழகிரி எச்சரிக்கை
ADDED : செப் 27, 2011 10:50 PM
மதுரை : ''சுவரில் வரைந்துள்ள ஜெ., மற்றும் விஜயகாந்த் படங்களை நீங்கள்
அழிக்கவில்லையென்றால், நாங்கள் அழிப்போம்,'' என, தேர்தல் அலுவலரை மத்திய
அமைச்சர் அழகிரி எச்சரித்தார். மதுரையில் மாநகராட்சி மேயர் வேட்பு
மனுத்தாக்கலுக்கு, வேட்பாளருடன் அழகிரி வந்தார். தேர்தல் அலுவலர் நடராஜனின்
அறையில் நுழைந்ததும், அங்கிருந்த நிருபர்களை வெளியில் இருக்குமாறு அழகிரி
கூறினார். தேர்தல் அலுவலர், ''நிருபர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம்;
அவர்கள் இருக்கட்டும்,'' என்றார். ''உங்களிடம் தனியாக பேசவேண்டும்,'' என,
அழகிரி கூறியதற்கு, ''தனியாக பேச இது நேரமல்ல, பின்னர் கட்டாயம் பேசலாம்,''
என்றார் நடராஜன். ''தேர்தல் விதிமீறல் குறித்து நாங்கள் கூறிய புகாருக்கு
என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?'' என, அழகிரி கேட்டார். ''படிப்படியாக
நடவடிக்கை எடுத்து வருகிறேன்,'' என நடராஜன் பதிலளித்தார். ''சிம்மக்கல்,
சேதுபதி ஸ்கூல், ஜங்ஷன் பகுதியில் ஜெ., மற்றும் விஜயகாந்த் படங்களை
வரைந்துள்ளனர். அதை அழித்து விடுங்கள்; இல்லையென்றால் நாங்கள் அழிப்போம்,''
என, எச்சரித்து விட்டு வெளியேறினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. நேர்மையான தேர்தல்
நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. சுவரில் வரைந்துள்ள படங்களை
அழிக்கவில்லையென்றால், நாங்களும் வரைவோம், என்றார்.
'தினமலர்' எங்கே : தேர்தல் அலுவலர் முன்னிலையில், நிருபர்களை பார்த்த
அழகிரி, ''எல்லோரும் பார்த்துக்கோங்க, நாங்க ஐந்து பேர் தான்
வேட்புமனுதாக்கல் செய்ய வந்துருக்கோம். நேற்று அ.தி.மு.க., மனுத்தாக்கலில்
எத்தனை பேர் பங்கேற்றார்கள் என பார்த்தீர்களா? 'தினமலர்' எங்கே? 'தினமலர்'
சார்பில் யாரும் வந்துருக்கீங்களா? முறைப்படி ஐந்து பேர் தான்
வந்துருக்கோம்ணு கட்டாயம் செய்தி போடுங்க,'' என்றார். வெளியில் வந்ததும்
கேள்வி கேட்டு பின்தொடர்ந்த பிற நிருபர்களிடம், ''அ.தி.மு.க., விதிமீறலை
எழுதமாட்றீங்க; நாங்க என்ன செய்தாலும் உடனே எழுதுறீங்க,'' எனக்கூறி
கிளம்பினார்.


