/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் மாரியம்மன் கோவில் பண்டிகை விற்பனைக்கு குவியும் நாட்டுக் கோழிசேலம் மாரியம்மன் கோவில் பண்டிகை விற்பனைக்கு குவியும் நாட்டுக் கோழி
சேலம் மாரியம்மன் கோவில் பண்டிகை விற்பனைக்கு குவியும் நாட்டுக் கோழி
சேலம் மாரியம்மன் கோவில் பண்டிகை விற்பனைக்கு குவியும் நாட்டுக் கோழி
சேலம் மாரியம்மன் கோவில் பண்டிகை விற்பனைக்கு குவியும் நாட்டுக் கோழி
ADDED : ஆக 08, 2011 03:04 AM
சேலம்: சேலத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தில் இருந்து, அதிக அளவில் சேவல்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வருகிறது.
இருந்த போதிலும் தட்டுப்பாட்டை காரணம் காட்டி அவற்றின் விலையில் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகரில் எட்டுப் பட்டி மாரியம்மன் கோவில் உட்பட, 42 மாரியம்மன் கோவில்களின் பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா, ஆக.,10ல் நடக்கிறது. இந்த பண்டிகை கொண்டாடும் அனைவரின் வீடுகளிலும் ஆடு, கோழி ஆகிய அசைவ உணவுகள் இடம் பெறுவது வழக்கம். அத்துடன் மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களும் அதிக அளவில் கோழிகளை வாங்குவர். சேலம் மாநகர், புறநகர் பகுதிகளில் தற்போது நாட்டுக் கோழி சேவல்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று தர்மபுரி மாவட்டம் பாட்டையம்பட்டி, பென்னாகரம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் ஆகிய பகுதிகளில் இருந்தும் சேலம் மாவட்டம் மேச்சேரி, தாரமங்கலம் பகுதிகளில் இருந்து வழக்கத்தை விட அதிக அளவில் நாட்டுக் கோழி சேவல்கள் நேற்று முதல் விற்பனைக்கு வரத் துவங்கி உள்ளது. சேலம் கொண்டு வரப்பட்ட நாட்டுக் கோழி சேவல்களை வியாபாரிகள் செவ்வாய்ப்பேட்டை, கோட்டை, பால்மார்க்கெட், சூரமங்கலம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி என முக்கிய இடங்களில் செயல்படும் கடைகளுக்கு சப்ளை செய்தனர். இது குறித்து வியாபாரி குமார் கூறியதாவது: சேலத்தில் நடக்கும் மாரியம்மன் கோவில்களின் பண்டிகைக்காக வெளியூரில் இருந்து நாட்டுக் கோழி சேவல்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். நாங்கள் கோழிகளை வளர்ப்பது இல்லை. கோழிகளை வளர்ப்பவர்களிடம் இருந்து வாங்கி வந்தே விற்பனை செய்கிறோம். ஆனால், நடப்பு ஆண்டில் நாங்கள் எதிர்பார்த்த அளவு நாட்டுக் கோழி கிடைக்க வில்லை. இதனால் குறைந்த அளவிலேய நாட்டுக் கோழி சேவல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதால் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிருடன் கிலோ, 100, 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சேவலின் விலையில், நேற்று, 30 ரூபாய் அதிகரித்து, 130, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நாட்டுக் கோழியின் எடைக்கு தக்கபடி விலையை நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


