Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் தர எந்த விலக்கும் இல்லை!லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறிவுறுத்தல்

தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் தர எந்த விலக்கும் இல்லை!லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறிவுறுத்தல்

தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் தர எந்த விலக்கும் இல்லை!லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறிவுறுத்தல்

தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் தர எந்த விலக்கும் இல்லை!லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறிவுறுத்தல்

ADDED : ஆக 25, 2011 11:38 PM


Google News
கோவை : லஞ்ச ஒழிப்புத்துறை பற்றிய விபரங்களை, தகவல் உரிமைச் சட்டத்தில் வழங்குவதற்கு தடையில்லை என்று, தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை தெரிவித்துள்ளது. அரசுத் துறைகளில் முறைகேடுகளைத் தடுக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தைத் தரவும், கடந்த 2005ல் தகவல் பெறும் உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.சாதாரண மக்களின் கிடைத்த காகித ஆயுதமாக இந்தச் சட்டம் பயன்பட்டு வருகிறது. இதன் மூலமாக, பல்வேறு அரசுத்துறைகளில் நடந்து வரும் ஏராளமான முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், லஞ்சம் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் பொறுப்பிலுள்ள மாநில லஞ்ச ஒழிப்புத்துறை மட்டும், இச்சட்டத்திலிருந்து தப்பித்து வந்தது. கடந்த 2008க்கு முன்பு வரையிலும், லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பான விபரங்களும், விசாரணை முடிந்த வழக்குகள் தொடர்பான விபரங்களும் தகவல் உரிமைச் சட்டத்தில் தரப்பட்டு வந்தன. தி.மு.க., ஆட்சியின் போது, கடந்த 2008ல் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், தகவல் உரிமைச் சட்டத்தில், இத்துறை தொடர்பான விபரங்களைத் தர விலக்கு அளிக்கப்பட்டது. விசாரணையின் துவக்க நிலையிலிருந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை, ரகசியம் காக்கும் பொருட்டு, இதனை வழங்க வேண்டாமென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை, தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது; கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 'விசாரணையில் இல்லாத மற்றைய வழக்குகள், துறை தொடர்பான விபரங்களை தகவல் உரிமைச் சட்டத்தில் வழங்க வேண்டும்,' என்று கோரிக்கை விடுத்தன. மாநில தகவல் ஆணையத்துக்கும் புகார்கள் குவிந்தன. அதன்பேரில், 'தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் கோருவோருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பான விபரங்களைத் தர வேண்டும்' என்று மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஐகோர்ட் சென்றது. மாநில தகவல் ஆணையம் தந்த உத்தரவு, சரிதான் என்று ஐகோர்ட் உறுதிப்படுத்தியது. டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை; அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு, லஞ்ச ஒழிப்புத்துறை தயாராகி வந்தது. இது தொடர்பாக, தலைமைச் செயலர் மற்றும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கமிஷனருக்கு கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் எழுதிய கடிதத்தில், 'விசாரணைக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பிற விபரங்களை தகவல் உரிமைச் சட்டத்தில் வழங்க வேண்டும்; மேல் முறையீடுக்கு ஒப்புதல் தராமல், ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கோரியிருந்தார்.இந்த கோரிக்கையை இப்போது அரசு ஏற்றிருப்பதாகத் தெரியவந்துள்ளது. கதிர்மதியோனுக்கு தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறையிலிருந்து வந்துள்ள பதிலில், 'தகவல் உரிமைச் சட்டத்தில் கோரப்படும் மனுக்களுக்கு தகவல் தர தடையில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்று கூறியுள்ளார். இதிலிருந்தே, இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல் முறையீடு செய்ய அரசு ஒப்புதல் தரவில்லை என்பது உறுதியாகியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையால் கடந்த 3 ஆண்டுகளாக பொத்திப் பாதுகாக்கப்பட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பான ரகசியங்கள், இனி வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் என்று நம்பலாம்.

- எக்ஸ்.எக்ஸ்.செல்வகுமார் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us